மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி சாதாரண அணியே என்றும், அந்த அணியால் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 4வது முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தமாக 10 அணிகள், 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள், இறுதிப் போட்டி என்று தொடர் நடக்கவுள்ளது. இதற்காக 10 மைதானங்கள் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணி விளையாட உள்ள 9 லீக் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்திய அணி அக்.8ஆம் தேதி தங்களின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதன்பின் அக்.14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.
ஆசியக் கோப்பை தொடருக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்க்ளிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ளார். இதனால் பாகிஸ்தான் அணியின் வலிமை குறைந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய மைதானங்களில் வெற்றிபெற தரமான ஸ்பின்னர்கள் தேவையாக உள்ளனர்.
ஆனால் பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் மற்றும் ஷடாப் கான் இருவருமே பெரிதாக ஸ்பின் செய்யக் கூடிய பந்துவீச்சாளர்கள் இல்லை. இருப்பினும் உலகக்கோப்பை தொடர் ஆசியாவில் நடப்பதால், பாகிஸ்தான் அணியை எவ்வளவு சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் வீரர்களின் பலரும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் அளவிற்கு பலம் வாய்ந்த அணி என்று கூறி வருகின்றனர். டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை, பாகிஸ்தான் சராசரி அணியாக தான் உள்ளது. என்னை பொறுத்தவரை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும் என்று தெரிவித்துள்ளார்.