பாகிஸ்தான் மீது எதிர்பார்ப்பு ஏன்?
பாகிஸ்தான் அணி கடந்த வருடங்களில் மிக மோசமான நிலையை அடைந்தது. மற்ற நாடுகள் பாகிஸ்தானில் வந்து கிரிக்கெட் ஆடாத காரணத்தால், அந்த அணி ஐக்கிய அரபு நாட்டில் கிரிக்கெட் ஆடி வந்தது. ஒரு ஆண்டில் அவர்கள் ஆடும் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் குறைந்து போனது. சென்ற ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி உள்ளே பாகிஸ்தான் நுழைந்த போது ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் 8வது இடத்தில் இருந்தது அந்த அணி. ஆனால், இறுதிப் போட்டி வரை வந்த பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வசந்த காலம் மீண்டும் தொடங்கி விட்டது என கூறப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பையில் மிக மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் எங்கே தொடங்கியதோ அங்கேயே வந்து நிற்கிறது.
பந்துவீச்சில் சொதப்பல்
பாகிஸ்தான் என்றாலே பந்துவீச்சில் சிறந்த அணி என்ற பெயர் உண்டு. ஆனால், சமீப காலங்களில் அந்த அணியின் பந்துவீச்சில் அத்தனை தாக்கம் இல்லை. முஹம்மத் ஆமிர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் அந்த அணி, நேற்று நடந்த வங்கதேச போட்டியில் 4 விக்கெட்கள் வீழ்த்திய ஜுனைத் கானுக்கு ஆசிய கோப்பையில் ஒரே ஒரு போட்டி தான் கொடுத்தது. ஆமிர் மிக மோசமாக பந்து வீசி வருகிறார். எனினும், அவர் முன்பு எதிரணிகளை கதிகலங்க வைத்த நாட்களை வைத்து அணியில் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.
பீல்டிங் ரொம்ப மோசம்
ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் படு மோசமாக இருந்தது. இந்த தொடரில் மட்டும் 6 கேட்ச்கள் விட்டு இருக்கிறார்கள். சொதப்பலான பீல்டிங்கால் ரன்களை கட்டுப்படுத்துவதிலும் கோட்டை விட்டது பாகிஸ்தான். இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா கொடுத்த இரண்டு கேட்ச்களை தவற விட்டனர், பாகிஸ்தான் வீரர்கள்.
பேட்டிங் சொல்ல முடியலை
பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் மிக மிக மோசமான நிலையில் உள்ளது. பெரிய நட்சித்திர ஆட்டக்காரர் என பில்ட் அப் செய்யப்பட்ட பாக்கர் சமான் இந்த தொடரில் 5 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் இரண்டு டக் அவுட் வேறு. கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மத் கூட நீண்ட நாட்களாக பேட்டிங்கில் சாதிக்கவில்லை. டாப் ஆர்டரில் இமாம் உல் ஹக் தவிர ஒருவரும் சொல்லிக் கொள்ளும்படி ரன் குவிக்கவில்லை.
பாகிஸ்தான் இனி தன் தவறுகளை பற்றி ஆராய்ந்து உலகக்கோப்பைக்குள் மீளுமா?