கராச்சி : மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிச்சயம் நடக்கும் என்பதால் பாகிஸ்தானுக்கு வர இந்திய கிரிக்கெட் அணி பயப்படக்கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அட்டவணை இன்னும் முறைப்படி அறிவிக்கப்படாத நிலையில், இந்த தொடர் பாகிஸ்தானில் தான் நடைபெறும் என்று ஐசிசி உறுதிப்பட கூறி இருக்கிறது.

இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி மறுத்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. இதற்காக இந்தியா விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் ஹைபிரிட் முறையில் இந்தியா விளையாடும் போட்டியை வேறு நாடுகளில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிகிறது. எனினும் இந்தியா இந்த தொடரில் இருந்து புறக்கணிக்க போகிறோம் என முடிவு எடுத்தால் மட்டுமே ஹைபிரிட் மாடல் கொண்டு வரப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் இந்திய அணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதால் தான் பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்ல மறுக்கிறது.
இந்த சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாவித் மியான்டட், மரணம் என்பது நிச்சயம் நடக்கும். அது எங்கு வேண்டாமானாலும் நடக்கும், எப்படி வேண்டுமானாலும் நடக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நடக்கும். இதனால் மரணத்தை பார்த்து இந்திய அணி வீரர்கள் பயப்படக்கூடாது அவர்கள் கண்டிப்பாக பாகிஸ்தான் நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். ஜாவித் மியாண்டட்டின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
எங்கள் நாட்டுக்கு வாருங்கள் முழு பாதுகாப்பு இருக்கும் என்று கூறி தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் ஜாவித் மியாண்டட், மரணம் எங்கு வேண்டுமானாலும் நடக்கும் அதற்காக பாகிஸ்தானுக்கு வர பயப்படக்கூடாது என்று கூறியிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காரணத்தைக் காட்டியே பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லக்கூடாது என்று இந்திய ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.