"கோப்பை திருடன்".. பாகிஸ்தான் அமைச்சரை கதறவிட்ட ரசிகர்கள்.. துபாய் மைதானத்தை விட்டே ஓடிய சம்பவம்
துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் அந்நாட்டு உள்துறை அமைச்சருமான மோசின் நக்வியிடம் கோப்பையைப் பெற மறுத்து புறக்கணித்தது. அதுமட்டுமின்றி, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்து "கோப்பை திருடன்" எனக் கோஷமிட்டு விரட்டியடித்த சம்பவமும் அரங்கேறியது.
துபாயில் நேற்று நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 8-வது முறையாக ஆசிய கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனால், மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்த இந்திய வீராங்கனைகள், பரிசளிப்பு மேடைக்கு வராமல் முற்றிலுமாகப் புறக்கணித்தனர்.

இதனால் ஏமாற்றமடைந்த மோசின் நக்வி, இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு 2-வது இடத்திற்கான காசோலையை மட்டும் வழங்கிவிட்டு மேடையை விட்டு அவசரமாக வெளியேறினார். அப்போது மைதானத்தில் திரண்டிருந்த இந்திய ரசிகர்கள் அவரைப் பார்த்து, "சோர் சோர் டிராபி சோர்.." (திருடன் திருடன்.. கோப்பை திருடன்) என முழக்கமிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
கடந்த 2025-ல் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய ஆண்கள் அணியும் மோசின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தது. அப்போது ஆத்திரமடைந்த நக்வி, இந்திய அணிக்குரிய சாம்பியன் கோப்பையைத் தனது துபாய் அலுவலகத்திற்கே எடுத்துச் சென்று பூட்டி வைத்தார். அந்த பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தே ரசிகர்கள் தற்போது அவரை "கோப்பை திருடன்" என கிண்டலடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே கைகுலுக்கும் வழக்கம் கூட நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை சீண்ட நினைத்து மேடைக்கு வந்த பாகிஸ்தான் அமைச்சர், ரசிகர்களின் இந்த முழக்கத்தால் தலைகுனிந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்திய அணி தன்னிடம் இருந்து கோப்பையை வாங்காது என்பது தெரிந்தும் வேண்டுமென்றே அவர் மைதானத்துக்கு வந்துள்ளார். ஆனால், அதனால் அவருக்கு அவமானமே மிஞ்சியது.


Click it and Unblock the Notifications


