பெங்களூரு : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அபாரமாக சதம் விளாசினார்.
பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்,மிச்சல் மார்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடி ஆட்டம் தொடங்கியதிலிருந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். டேவிட் வார்னர் 10 ரன்களில் இருக்கும் போது ஒரு காமெடி நடந்தது. பாகிஸ்தான் ஃபீல்டிங் செய்கிறது என்றால் நிச்சயம் மைதானத்தில் ஒரு காமெடி நடக்கும். அந்த வகையில் வார்னர் 10 ரன்கள் இருக்கும்போது கொடுத்த அழகான கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர் உசாமா அமீர் தவறவிட்டார்.
இந்த ஈஸி வாய்ப்பை பாகிஸ்தான் வீணடித்தது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இப்படி ஒரு கேட்சை மிஸ் செய்து விட்டார்களே என பாகிஸ்தான் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். பாகிஸ்தான் பந்துவீச்சை பவுண்டரி ,சிக்ஸர் என பறக்க விட அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
12.3 ஓவர்கள் எல்லாம் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடக்க 29.2 ஓவர்களில் எல்லாம் 200 ரன்களை தொட்டது. மறுபுறம் மிச்சல் மார்ஷ் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் 83 பந்துகளில் சதம் விளாசினார்.
இதில் 7 பவுண்டரிகளும் ஆறு இமாலய சிக்சர்களும் அடங்கும். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இதே போல் டேவிட் வார்னரின் கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான அணி தவறவிட்டது. அப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டேவிட் வார்னர் சதம் விளாசி இருந்தார். தற்போது அதேபோல் மீண்டும் நிகழ்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.