சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் பற்றி பார்க்கலாம்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் கம்பீரமாக புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்தது. ஆனால் அதன்பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன் ஹாட்ரிக் தோல்வியை பாகிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.

குறிப்பாக சென்னையில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததை அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பதவி விலக வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளது. களத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பவுலர்களை பந்துவீச வைக்காததும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கவுள்ளது. கடந்த 5 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 300 ரன்களை கடந்துள்ளது. அதிலும் முதலில் பேட்டிங்கில் 6வது முறையாக தொடர்ந்து 300 ரன்களை கடந்து சாதனை படைத்தது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் வலிமையான பேட்டிங் அட்டாக்கை, மோசமான ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தான் பவுலர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் வீரர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் டெக்னிக்கலாக பந்துவீசுவதில் கோட்டைவிடுவது தொடர்கதையாகி வருகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய போது, பாகிஸ்தான் அணி 2 ஸ்பின்னர்களை மட்டுமே களமிறக்கியது. அதிலும் ஷதாப் கான் ஷார்ட் லெந்திலேயே பந்துகளை வீசி வருகிறார். அவரின் லெந்தை மாற்ற வேண்டும் என்று கூட எந்த வீரரும் அவருக்கு கூறவில்லை. பார்ட் டைம் பவுலரான இஃப்திகார் அஹ்மத் சரியான லெந்தில் வீசி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.
ஆனால் முன்னணி வீரரான ஷதாப் கானால் எந்த அழுத்தத்தையும் கொடுக்க முடியவில்லை. அதேபோல் ஹாரிஸ் ராஃப் வேகத்தில் மட்டும் கவனம் வைத்து, லைன் மற்றும் லெந்தில் கோட்டைவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவரிடம் இந்திய ஆடுகளங்களில் இவ்வளவு வேகம் தேவையில்லை என்று கூறுவதற்கு கூட அணி நிர்வாகம் தரப்பில் ஆளில்லை.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஓவரிலேயே ரன் கொடுப்பதால் அவர் எப்போதும் அழுத்தத்துடனே செயல்பட வேண்டியுள்ளது. ஷாகின் அப்ரிடியை தவிர்த்து பார்ட் டைம் பவுலரான இஃப்திகார் அஹ்மத் மட்டுமே பாகிஸ்தான் பவுலிங் அட்டாக்கில் ஓரளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறார். 1992 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 5 போட்டிகளை வென்று உலகக்கோப்பையை வென்றது பாகிஸ்தான், தற்போது எதிர்வரும் 4 போட்டிகளை வென்றாலே பாகிஸ்தானால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதனை செய்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.