சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்னும் தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தாங்கள் இந்தியாவில் சில மைதானங்களில் விளையாட மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால் அதனை சரி செய்யும் முயற்சியில் ஐசிசி ஈடுபட்டு வருகிறது.
இதில் அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு உரிய பாதுகாப்பு இருக்காது என்பதால் தாங்கள் அங்கு விளையாட மாட்டோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனை சரி செய்ய ஐசிசி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுப்பியுள்ளது. அதன்படி சென்னையில் ஒரு போட்டியில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அணி கூறி இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
அமைதி பூங்காவான சென்னையில் ஏன் கிரிக்கெட் விளையாட மாட்டீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு பாகிஸ்தான் சொன்ன பதில் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஐசிசி யின் அட்டவணையில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் அந்த அணியை தாங்கள் எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பு இருக்காது என்று பாகிஸ்தான் கூறுகிறதாம். இதனால் ரன் குவிப்புக்கு சாதகமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியை வையுங்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் வலியுறுத்தி வருகிறதாம்.
பாகிஸ்தானின் இந்த பேச்சு சின்னப் பிள்ளைத்தனமாக இருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை என்று இப்படி யாரும் இதுவரை ஒப்புக்கொண்டதில்லை என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்திற்காக எல்லாம் மைதானத்தை மாற்ற முடியாது என்று ஐசிசி பிடிவாதமாக இருக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.