லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. வெறும் விமர்சனங்களோடு மட்டும் நின்றுவிடாமல், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் சொந்த அணி வீரர்களுக்கு அபராதம் விதித்து இருக்கிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியதால், தேசிய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் தலா 5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் தோராயமாக 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்திய அணியிடம் தோற்றதுதான் இந்த அபராதத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு முக்கியக் காரணம் உள்ளது. ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது வாரியத்திற்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வியைத் தழுவியது. கடைசி நேரத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணியைக் காப்பாற்றவில்லை. மேலும், ஒவ்வொரு முறையும் இந்திய அணியிடமும் பாகிஸ்தான் அணி தோற்று வருகிறது. இது பாகிஸ்தான் அரசியலிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் தங்களது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் இது குறித்துப் பேசுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே உங்கள் நாட்டின் கிரிக்கெட் திறமையை உலக அரங்கில் நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நீங்கள் மீண்டும் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது" என்று தெரிவித்தார்.
மற்றொரு முன்னாள் கேப்டனான முகமது யூசுப் கூறுகையில், "நாம் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டிய நேரம் இது. பெரிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பும் சில வீரர்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி நீண்ட காலமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன" என்று விமர்சித்தார்.
முன்னாள் வீரர் மொயின் கான் பேசுகையில், "தரவரிசையில் முன்னிலையில் உள்ள சிறந்த அணிகளை வீழ்த்தும் திறன் இல்லாமல் எந்தவொரு பெரிய தொடரையும் உங்களால் வெல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக, அணித் தேர்விலும் களத்திலும் நாம் ஏராளமான தவறுகளைச் செய்துள்ளோம்" என்று சுட்டிக்காட்டினார்.

இந்த விமர்சனங்கள் போட்டி முடிவுகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. தற்போதைய கேப்டன் சல்மான் அலி ஆகா, முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் மூத்த வீரர்களான ஷதாப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. தொடர் முடிந்து நாடு திரும்பியதும் சல்மான் அலி ஆகா தனது கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.