இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக தேசிய அணியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், விரக்தியில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இவர் கடைசியாக 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக சர்வதேசப் போட்டியில் விளையாடினார். தனது ஆறு வருட கிரிக்கெட் பயணத்தில், பாகிஸ்தான் அணிக்காக மொத்தம் 34 சர்வதேசப் போட்டிகளில் உஸ்மான் ஷின்வாரி பங்கேற்றுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான ஷின்வாரி, பின்னர் தனது ஒருநாள் மற்றும் டெஸ்ட் அறிமுகத்தையும் இலங்கை அணிக்கு எதிராகவே செய்தார். இவர் மொத்தமாக 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளையும், 16 டி20 போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவர் ஆடிய ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் இலங்கைக்கு எதிராகவே களமிறங்கினார். டிசம்பர் 2019-ல் நடைபெற்ற அந்தப் போட்டியே, பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது.
தனது கிரிக்கெட் பயணத்தில் ஷின்வாரிக்கு இலங்கை அணிக்கு எதிரான போட்டிகள் மறக்க முடியாதவையாக அமைந்துள்ளன. தனது இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே, ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.
மீண்டும் 2019-ஆம் ஆண்டு, தனது கடைசி ஒருநாள் போட்டிக்கு முந்தைய ஆட்டத்தில், இலங்கைக்கு எதிராகவே தனது இரண்டாவது 5-விக்கெட் சாதனையை நிகழ்த்தினார். இவர் 2018-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உஸ்மான் ஷின்வாரி ஓய்வை அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தானை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முத்தரப்பு டி20 தொடரைக் கைப்பற்றியது. முகமது நவாஸின் அபாரமான 5-விக்கெட் மற்றும் ஹாட்ரிக் சாதனைகளால் பாகிஸ்தான் இந்த வெற்றியைப் பெற்றது. இந்தத் தொடர் வெற்றி, ஆசியக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. பாகிஸ்தான் ஆசியக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் செப்டம்பர் 12 அன்று ஓமன் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.