லாகூர்: 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷா வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தனது கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாகக் கூறி அவர் அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.
லாகூர் கடாபி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற லாகூர் கலந்தர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியின் போது இந்த சம்பவம் அரங்கேறியது. பிஎஸ்எல் நிர்வாகிகளால் முதலமைச்சர் மரியம் நவாஸுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, "லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு ராணிக்கு அளிக்கப்படுவது போல் இவருக்கு ஏன் இவ்வளவு ராஜமரியாதை அளிக்கப்படுகிறது?" என்று இங்கிலாந்து ராணியுடன் ஒப்பிட்டு காட்டமாக விமர்சித்து இருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் தீயாய் பரவி அரசியல் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த பதிவு அதிரடியாக நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தனது சமூக வலைத்தள கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாகவும், தற்போது அது வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் நசீம் ஷா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த சர்ச்சைக்குரிய பதிவு தன்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த சீசனில் நசீம் ஷா ராவல்பிண்டி பிண்டிஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணி தனது முதல் போட்டியில் பெஷாவர் சல்மி அணியை எதிர்கொள்கிறது.
தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாகிஸ்தானில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிஎஸ்எல் தொடர் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான பிஎஸ்எல் தொடரின் திறப்பு விழா முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தினமும் 30,000 ரசிகர்கள் மைதானத்தில் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக, பார்வையாளர்கள் யாருமின்றி மூடிய மைதானத்திலேயே போட்டிகள் நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார். முன்னதாக பல நகரங்களில் திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடர், தற்போது வெறும் 2 நகரங்களில் மட்டுமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இதை பெட்ரோல் தட்டுப்பாடு லீக் என சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.
