லாகூர்: 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்த இறுதி முடிவு, வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி 30 அல்லது அடுத்த திங்கட்கிழமை பிப்ரவரி 2 எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார். அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக, இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் மோசின் நக்வி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தியாவுக்குப் பயணிக்க மறுத்ததால், கடந்த வாரம் நடந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை அடுத்து, அவர்களுடன் ஒற்றுமையைக் காட்டும் விதமாக பாகிஸ்தான் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள பரிசீலித்து வருவதாக பரவலாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கதேசத்திற்குப் பதிலாக, ஐசிசி ஸ்காட்லாந்து அணியை தேர்வு செய்துள்ளது; பிப்ரவரி 7 அன்று உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

முழுப் போட்டியையும் பாகிஸ்தான் புறக்கணிக்காமல், பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவிருந்த பரம எதிரி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மட்டும் கலந்துகொள்ளாமல் போகலாம் என்றும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவு அடுத்த திங்கட்கிழமைக்குள் எடுக்கப்படும் என்று நக்வி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
“பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் ஒரு பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. ஐசிசி விவகாரம் குறித்து அவருக்கு விளக்கினேன். அனைத்து சாத்தியமான வழிமுறைகளையும் பரிசீலித்து தீர்வு காணுமாறு அவர் அறிவுறுத்தினார். இறுதி முடிவு வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை எடுக்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது,” என்று மொஹ்சின் நக்வி தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை சல்மான் அலி ஆகா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை டி20 உலகக் கோப்பைக்காக அறிவித்தது. அக்கூட்டத்தில், பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்தியாவுக்குப் பயணிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவிக்காததால், அந்த அணி விலக்கப்பட்ட விவகாரத்தில் பிசிபியின் கொள்கை குறித்து வீரர்களுக்கு நக்வி விளக்கினார். வங்கதேசத்திற்கு ஆதரவளிக்கும் பாக். கொள்கை நிலைப்பாட்டிற்கு வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர் என பிசிபி தெரிவித்துள்ளது.