கொல்கத்தா: பாகிஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரரான அப்துல்லா சஃபீக் 6 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் விளாசி இருப்பது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
நியூசிலாந்து அணியின் 23 வயதாகும் இளம் வீரர்கள் ரச்சின் ரவீந்திரா இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வீரராக மாறியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் என்று 406 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணிக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களிலேயே குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும் ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர் என்பதும் இவர் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், தங்களுக்கு பிடித்த ஐபிஎல் அணிகள் இவரை டிசம்பர் மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் ஏலத்தில் வாங்க வேண்டும் என்று இப்போதே விவாதிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் உலகக்கோப்பை தொடரில் மற்றொரு 23 வயதாகும் வீரரும் அசத்தி வருவதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்க தவறியுள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக முதல்முறையாக களமிறங்கிய ஃபகர் ஜமான் 74 பந்துகளில் 7 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 74 ரன்களை விளாசினார். இவரின் அதிரடி காரணமாக பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றதோடு, ரன் ரேட்டையும் அதிகரித்து கொண்டுள்ளது.
இந்த வெற்றிக்கு இன்னொரு காரணமாக இளம் வீரர் அப்துல்லா சஃபீக் இருந்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர், 69 பந்துகளில் இரு சிக்ஸ் மற்றும் 9 பவுண்டரி உட்பட 68 ரன்களை சேர்த்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் அப்துல்லா சஃபீக் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். இதுவரை இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் என்று 332 ரன்களை விளாசியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதாகும் அப்துல்லா சஃபீக், ஆசிய கோப்பை தொடர் வரை பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இருப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஜமானின் பேட்டிங் ஃபார்ம் அப்துல்லா சஃபீக்கிற்கு வாய்ப்பை கொடுத்தது. அதனை கெட்டியாக பிடித்து கொண்ட சஃபீக், உலகக்கோப்பை தொடரில் ஆடும் பேட்ஸ்மேன்களில் மிகச்சிறந்த ஒருவராக மாறியுள்ளார். ஸ்பின் மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அற்புதமான டெக்னிக்கை கொண்டுள்ளதால், பாபர் அசாம் மற்றும் ரிஸ்வானுக்கு பின் அந்த அணியின் முக்கிய நட்சத்திரமாக மாறுவார் என்று பார்க்கப்படுகிறது.