ஹைதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலி தன் மனைவி, இந்தியாவுக்கு போனால் கண்டிப்பாக செய்ய வேண்டும் என சொல்லி அனுப்பிய ஒரு காரியத்தை செய்ய முடியவில்லையே என ஒரு பேட்டியில் புலம்பி இருக்கிறார்.
ஹசன் அலி, பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர். அவர் முதலில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை அணியில் இடம் பெறவில்லை.

அதன் பின் நசீம் ஷா என்ற வேகப் பந்துவீச்சாளர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு கடைசி நேரத்தில் ஹசன் அலி உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். ஹசன் அலிக்கும் இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு உள்ளது.
ஹசன் அலியின் மனைவி சமியா ஆர்ஜூ இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். அவர் இந்தியாவில் டெல்லியில் வசித்த போது, டெல்லியின் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் சுவையான, ருசியான தின்பண்டங்களை சுவைத்து அதில் மயங்கி இருக்கிறார்.
பின்னர் ஹசன் அலியை திருமணம் செய்து பாகிஸ்தான் சென்று விட்ட நிலையில், அவரால் டெல்லியின் தெருவோரக் கடைகளின் தின்பண்டங்களை சுவைக்க முடியாமல் போனது. எனினும், தன் கணவர் ஹசன் அலியிடம் தினமும் அந்த சுவையை சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்.
ஐந்து வருடமாக இந்த கதைகளை கேட்டுக் கொண்டிருந்த ஹசன் அலிக்கு திடீரென இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அப்போதே அவரது மனைவி சமியா நிச்சயம் டெல்லிக்கு சென்று அங்கே தெருவோரக் கடைகளில் சாப்பிட்டு பார்க்க வேண்டும் என கூறி இருக்கிறார்.

ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அணி ஆடும் போட்டிகள் எதுவும் டெல்லியில் நடைபெறவில்லை. மேலும், பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் இஷ்டம் போல வேறு நகரங்களுக்கு செல்லவும் முடியாது. போட்டி நடக்கும் இடங்களுக்கு ஒரே அணியாகத் தான் செல்ல வேண்டும். காரணம், பாகிஸ்தான் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருப்பதால் பாதுகாப்பு வீரர்கள் இல்லாமல் வீரர்கள் தனியாக செல்ல முடியாது.
இந்த நிலையில் தான் ஹசன் அலி தன் மனைவியின் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என ஒரு பேட்டியில் புலம்பி இருக்கிறார்.
ஹசன் அலி அந்தப் பேட்டியில் கூறுகையில், "எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. என் மனைவி எப்போதும் டெல்லியைப் பற்றியும், அங்கு விற்கும் தெருவோரக் கடைகளின் உணவுகளை பற்றியும் தான் பேசிக் கொண்டே இருப்பார். நான் டெல்லி செல்ல மிகவும் ஆசைப்படுகிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது சாத்தியம் இல்லை" என்றார்.