ஹைதராபாத் : பாகிஸ்தான் அணி வீரர் முகமது நவாஸ் நெதர்லாந்து வீரர்களை ஏமாற்றி ரன் எடுத்து விட்டதாக நினைத்து வேடிக்கையான முறையில் ரன் அவுட் ஆகி இருக்கிறார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான 2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதலில் 38 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.

ஆனாலும், பின் சமாளித்து ஒருவழியாக ரன்களை குவித்தது. முகமது ரிஸ்வான் 68 ரன்களும், சவுது ஷகீல் 68 ரன்களும் எடுத்தால் அந்த அணி 2௦௦ ரன்களை கடந்தது. கடைசி நேரத்தில் முகமது நவாஸ் 39 ரன்கள் குவித்தார். 47வது ஓவரில் ஷஹீன் அப்ரிடி பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
கோலின் ஆக்கர்மேன் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்றார் அப்ரிடி. ஆனால், பந்து அவரது காலில் பட்டு பைன் லெக் திசையில் ஓடியது. ஆஹா, நான் ரன் ஓடி விடலாம் என நவாஸ் எதிர்முனையில் இருந்து ஓடி வந்தார். ஆனால், அப்ரிடி அவரை மீண்டும் திரும்பி போகச் சொன்னார்.
உடனே நவாஸ் தன் முனைக்கு திரும்பினார். ஆனால், அங்கே பந்துவீச்சாளர் ஆக்கர்மேன் பீல்டர் எறிந்த பந்தை பிடிக்க தவறியதால், அதை பயன்படுத்தி ஷஹீன் அப்ரிடி மற்றும் நவாஸ் ரன் ஓடினர்.
அப்போது பீல்டர் பந்தை விக்கெட் கீப்பருக்கு எறியவே பந்தை பிடித்து அவர், நவாஸ்-ஐ ரன் அவுட் செய்தார். ஓவர்த்ரோ வாய்ப்பை பயன்படுத்தி நெதர்லாந்து அணியை ஏமாற்றி ரன் எடுக்க நினைத்த நவாஸ் தானே ரன் அவுட் ஆனார்.
பின் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 286 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் வீரர்கள் சிரிப்பை வரவழைக்கும் வகையில் ரன் அவுட் ஆவதும், கேட்ச்களை கோட்டை விடுவதும் புதிதல்ல. அந்த அணியில் வீரர்கள் மாறினாலும், இந்த காட்சிகள் மட்டும் மாறாது. அது ஏன் என்பதும் புரியவில்லை.