கொழும்பு: பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பாகிஸ்தான் பவுலர்கள் பற்றி பேசியதாக பரவிய வதந்திக்கு, அந்த அணியி ஷடாக் கான் பதிலடி கொடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே அதில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. இரு அணி வீரர்களும் வெற்றிக்காக கடைசி பந்து வரை போராடுவார்கள். இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக முக்கியத்துவம் இருக்கும். அதேபோல் போட்டிக்கு முன்பும், பின்பும் இரு அணி வீரர்களும் வார்த்தைகள் மூலமாக உரசிக் கொள்வார்கள்.

அந்த வகையில் ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது சில வார்த்தைகள் சர்ச்சையாகின. தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரை சமாளிக்க இந்திய அணியின் விராட் கோலி போதும் என்று கூறியதாக சொல்லப்பட்டது. பாகிஸ்தான் அணியை இவ்வளவு குறைத்து மதிப்பிடுவதா என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில், அஜித் அகர்கர் இப்படியான கருத்துகளை பேசவில்லை என்று தெரிய வந்தது. இந்த நிலையில் அஜித் அகர்கர் பேசியதாக பரவிய வதந்திக்கு, பாகிஸ்தான் அணியின் ஷடாப் கான் பதில் அளித்து மாட்டுக் கொண்டுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ஷடாப் கான் பேசுகையில், வார்த்தைகள் எப்போதும் உண்மையாகிடாது. எப்போது போட்டி நடக்கும் நாளில் தான் உண்மை தெரிய வரும். இந்திய அணியில் இருந்தோ, அல்லது பாகிஸ்தான் அணியில் இருந்தோ என்ன வேண்டுமானாலும் கருத்துகள் சொல்லப்படலாம். ஆனால் அவை வெறும் வார்த்தைகள் தான். அதனால் ஆட்டம் நடக்கும் நாளில் யார் சொன்னது உண்மை என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு அசாதாரண வளர்ச்சியடைந்துள்ளதால், ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணி பெரும் சவாலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.