சென்னை: 24 கோடிக்கும் அதிகமான பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் உமர் குல் அறிவுரை கூறியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்த நிலைக்கு பின் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அடுத்து வரும் 3 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதோடு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை வைத்த உருவாகும்.

ஆனால் பாகிஸ்தான் அணி அடுத்த வரும் 3 போட்டிகளில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களே இழந்துவிட்டனர். ஏனென்றால் கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணியிடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடைந்த தோல்வி, அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என்றும், அவரது இடத்திற்கு ரிஸ்வான் அல்லது ஷாகின் அப்ரிடி இருவரில் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதேபோல் பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னர்களின் தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஏனென்றால் பாகிஸ்தான் அணியின் முன்னணி ஸ்பின்னராக ஷதாப் கானால் உலகக்கோப்பை தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் பிட்சில் திடீரென காயம் என்று கூறி ஷதாப் கான் வெளியேறியதை முன்னாள் வீரர் உமர் குல் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து உமர் குல் பேசுகையில், ஷதாப் கானுக்கு பெரிய காயம் ஏற்பட்டதை போல் தெரியவில்லை. சில விக்கெட்டுகள் வீழ்த்திய பின், பாகிஸ்தான் வீரர்களை உற்சாகப்படுத்த கேமரா முன்பாக கொண்டாடினார். அப்படியானால் அவர் ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்றே அர்த்தம். 24 கோடி பாகிஸ்தான் ரசிகர்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறார். இது சாதாரண விஷயமில்லை. அவரின் ஸ்கேனிலும் எந்த பாதிப்பிலும் இருப்பதாக தெரியவில்லை.
இதன் மூலமாகவே அவர் அழுத்தம் மற்றும் விளையாடுவதற்கு பயந்து களத்தில் இருந்து வெளியேறியது தெரிகிறது. காயமடைந்த போதும் ஒற்றை கையில் பேட்டிங் செய்த வீரர்கள் இருக்கிறார்கள். சென்னை ரசிகர்கள் அவ்வளவு ஆதரித்தும், பாகிஸ்தான் அணி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.