டெல்லி: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இதுவரை விசா வழங்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தமாக 10 அணிகள், 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள், இறுதிப்போட்டி என்று உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதற்காக 10 மைதானங்கள் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணி விளையாட உள்ள 9 லீக் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்திய அணி அக்.8ஆம் தேதி தங்களின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதன்பின் அக்.14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.
அதேபோல் பாகிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை அக்.6ஆம் தேதி எதிர்த்து விளையாடவுள்ளது. அதற்கு முன்பாக செப்.29ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும், அக்.3ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி இரு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் நசீம் ஷாவிற்கு பதிலாக ஹசன அலி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியா வருவதில் சிக்கல் நிலவி வருகிறது.
உலகக்கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் இந்தியா வருவதற்காக மத்திய அரசு தரப்பில் விசா வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணி ஏற்கனவே இந்தியா வந்து பயிற்சியையும் தொடங்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட மீதமுள்ள 8 அணிகளுக்கும் விசா வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மட்டும் இந்தியா வருவதற்கு இதுவரை விசா வழங்கப்படவில்லை. அவர்களுக்கு விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாயில் சில நாட்கள் பயிற்சி பெறலாம் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால் மத்திய அரசு விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பாகிஸ்தான் வீரர்களின் துபாய் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. செப். 27ஆம் தேதிக்குள் விசா நடைமுறைகள் முடிவடைந்து பாகிஸ்தான் அணி இந்தியா வந்து சேரும் என்று பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான இந்தியா வரும் பாகிஸ்தான் 2 நாட்கள் கூட ஓய்வில்லாமல் பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி வீரர்கள் பலரும் முதல்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.