மும்பை: 2026 டி20 உலககோப்பை போட்டியில் இந்திய அணியுடனான அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, குரூப் A புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த மோசமான தோல்வி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும் அவர்களின் வாய்ப்புகளை தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் மூன்றாவது குரூப் A போட்டியில், பாகிஸ்தான் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பரபரப்பான போட்டியில், இந்தியா நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணித் தரப்பில், வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர். மேலும், குல்தீப் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினர்.
இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வி பாகிஸ்தானின் சூப்பர் 8 தகுதி வாய்ப்புகளை ஆபத்தில் தள்ளியுள்ளது. பாகிஸ்தான் அணி, தற்போது குரூப் A புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளது. டி20 உலகக் கோப்பை விதிகளின்படி, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
தற்போதுள்ள புள்ளிகள் பட்டியல் நிலவரப்படி, இந்தியா 3 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது, அமெரிக்கா 4 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தான் 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் முறையே 2 மற்றும் 0 புள்ளிகளுடன் கடைசி இடங்களை பிடித்துள்ளன.
சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற, பாகிஸ்தான் தனது நான்காவது மற்றும் கடைசி குரூப் A போட்டியில் நமீபியாவை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும். வரும் புதன்கிழமை பிப்ரவரி 18ஆம் தேதி கொழும்பில் உள்ள சிங்காளிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்த முக்கியப் போட்டி நடைபெறவுள்ளது.
நமீபியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தால், அவர்கள் புள்ளிகள் பட்டியலில் அமெரிக்காவிற்கு கீழே நிறைவு செய்து, சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழப்பார்கள். இருப்பினும், பாகிஸ்தானின் தோல்வி அமெரிக்காவின் சூப்பர் 8 தகுதியை உடனடியாக உறுதிப்படுத்தாது.
அமெரிக்க அணி, புதன்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்தியா-நெதர்லாந்து போட்டி முடிவிற்காக காத்திருக்க வேண்டும். அந்தப் போட்டியில் இந்தியா நெதர்லாந்தை தோற்கடித்தால், அமெரிக்கா குரூப் A-ல் இரண்டாம் இடத்தைப் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
ஒருவேளை நெதர்லாந்து இந்தியாவை அதிர்ச்சியூட்டி தோற்கடித்தால், அவர்களும் 4 புள்ளிகளை எட்டிவிடுவர். அப்போது அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து இடையே சிறந்த நிகர ரன் ரேட் (NRR) கொண்ட அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
ஆனால் பாகிஸ்தான் அணி புதன்கிழமை நமீபியாவை தோற்கடித்தால், சல்மான் அலி ஆகா தலைமையிலான அந்த அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்து எளிதாக சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும். பாகிஸ்தானின் எதிர்காலம் அவர்கள் கையில் உள்ளது.