லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி, டி20 அணியில் இடம்பெறவே முற்றிலும் தகுதியற்றவர் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்து இழந்தது. தோல்வி அடைந்த பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக ஷாகின் அப்ரிடி இருந்தார்.
இதையடுத்து, எந்த வடிவப் போட்டிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்ற அடிப்படை அறிவு கூட தேர்வுக்குழுவினருக்கு இல்லை என ஷாகின் அப்ரிடியின் மாமனாரும் முன்னாள் வீரருமான ஷாகித் அப்ரிடி சாடியிருந்தார். இந்தச் சூழலில், ஷாகின் அப்ரிடிக்கு ஆதரவாக சிலர் டி20 அணியின் கேப்டன் பதவியைக் கொடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருவதாக ரஷித் லத்தீப் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ள ரஷித் லத்தீப், "ஒருநாள் அணியின் கேப்டனாக ஷாகின் அப்ரிடி இருக்கக் கூடாது என அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், அவரை டி20 அணியின் கேப்டனாக்க வேண்டும் எனச் சிலர் ஆதரவாக பேசுகிறார்கள். வெளிப்படையாகக் கூற வேண்டுமானால், ஷாகின் டி20 அணியில் விளையாடவே தகுதியற்றவர். ஒருகாலத்தில் அவர் சிறந்த வீரராக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது அதற்கான நேரம் முடிந்துவிட்டது" என்று மிகக் காட்டமாகக் கூறியுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை ஷாகின் அப்ரிடிக்கு இருந்தாலும், 2026 டி20 உலகக்கோப்பையில் அவரது பந்துவீச்சு மிக மோசமாக அமைந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களில் 31 ரன்களை வாரி வழங்கினார். அதேபோல், அமெரிக்காவுக்கு எதிராக 4 ஓவர்களில் 42 ரன்கள் வழங்கி 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

குறிப்பாக, இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் ஆட்டத்தின் 20 ஆவது ஓவரில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்து அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
