மும்பை: பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) குறித்துத் தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இந்திய வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த ஐசிசி அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு ஆதாரமும் இல்லாத நிலையில் அவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகமது ஷேசாத், பிசிசிஐ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐசிசி விதிமுறைகளை மீறுவதாகத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "ஐசிசி தொடர்களின் போது இந்திய வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனையை (Dope Test) நேரடியாக நடத்த பிசிசிஐ அனுமதிப்பதில்லை. ஐசிசி அதிகாரிகள் இந்திய வீரர்களைச் சோதிக்க வரும்போதெல்லாம், பிசிசிஐ அதனைத் தடுத்து நிறுத்துகிறது. தங்களிடம் சிறந்த தொழில்நுட்ப வசதிகள் இருப்பதாகவும், தங்கள் வீரர்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்வோம் என்றும் கூறி ஐசிசி அதிகாரிகளைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்" என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் விதிமுறைகளின்படிதான் சோதனைகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளின் போது அல்லது பயிற்சிகளின் போது வீரர்களிடம் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுச் சோதிக்கப்படும். வீரர்கள் தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் தவறு செய்யும் வீரர்களுக்குத் தடைகள் விதிக்கப்படும். ஆனால், இந்த விதிமுறைகள் இந்திய அணிக்கு மட்டும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதே அகமது ஷேசாத் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும். அவர் கூறும் இந்த புகாருக்கு என்ற சான்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என்று கணித்திருந்தார். இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக இருப்பதாகவும், ஓரிரு வீரர்கள் மட்டுமே ரன் குவிப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார். ஆனால், அவரது கணிப்பைப் பொய்யாக்கும் வகையில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. களத்திற்கு வெளியே பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தெரிவிக்கும் கருத்துகள் இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
