துபாய்: பாகிஸ்தான் ஸ்பின் பவுலர் முகமது ஹபீஸ் பந்தை எறிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஓராண்டு காலம், அவருக்கு பந்து வீச தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார் முகமது ஹபீஸ். இவ்விரு அணிகளுக்கு நடுவேயான முதல் டெஸ்ட் போட்டியின்போது, முகமது ஹபீஸ் பந்து வீசிய முறை, சர்ச்சையை உருவாக்கியது. அவர் பந்தை எறிவது போல தெரிவதாக போட்டி நடுவர்கள் முறையிட்டதை தொடர்ந்து, பந்து வீச்சு சோதனைக்கு முகமது ஹபீஸை உட்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த 6ம் தேதி, சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்திலுள்ள, பவுலிங் சோதனை மையத்தில், முகமது ஹபீஸை பந்து வீசச் செய்து சோதித்து பார்த்தனர். அப்போது, அவர் 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்தை எறிவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஐசிசிக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
அறிக்கையை பரிசீலித்த ஐசிசி, முகமது ஹபீஸ் பந்தை எறிவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சர்ச்சைக்கு உள்ளாகி, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் முதல் முகமது ஹபீஸ் சஸ்பெண்ட்டுக்கு உள்ளாகி இருந்தார். இவ்வாண்டு ஏப்ரலில்தான் அவருக்கு தடை விலகியது. மீண்டும் (2 வருடத்திற்குள்ளாக) அதே குற்றச்சாட்டு உள்ளாகியுள்ளதால், ஐசிசி விதிமுறைகள் படி இன்னும் 12 மாதங்களுக்கு அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இத்தகவலை ஐசிசி செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.