கோலி தொடர்ந்து மூன்று சதங்கள்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் கோலி சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற அரிய சாதனையை நிகழ்த்தினார் கோலி. மேலும், இருதரப்பு கிரிக்கெட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது வீரராக இணைந்தார். இதற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் ஷோயப் அக்தர்.
|
என்ன சவால்?
அந்த வாழ்த்தோடு சேர்த்து, பேட்டிங்கில் கலக்கி வரும் கோலிக்கு அக்தர் புதிய இலக்கு ஒன்றை நிர்ணயித்து இருக்கிறார். தற்போது சதம் அடித்து வருவதை தொடர்ந்து செய்து, 120 சதங்களை கடக்க வேண்டும் என தன் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் அக்தர்.
சச்சினை கோலி முந்துவார்
சர்வதேச போட்டிகளில் சச்சின் 100 சதங்கள் அடித்துள்ளார் (ஒருநாள் மற்றும் டெஸ்ட் சேர்த்து). தற்போதுள்ள வீரர்களில் அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்புள்ள ஒரே வீரர் கோலி மட்டுமே. கோலி தற்போது 38 ஒருநாள் சதங்களும், 24 டெஸ்ட் சதங்களும் அடித்துள்ளார். அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறார். சச்சின் 100 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
120 சதங்கள் சாத்தியமா?
கோலி இதே துடிப்புடன் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் ஆடும் பட்சத்தில் எளிதாக 100 சதங்களை கடந்து விடுவார். எனினும், ஷோயப் அக்தர் விட்ட சவாலை முறியடித்து 120 சதங்களை எட்டுவார் எனவும் பலர் கூறி வருகின்றனர்.