பாகிஸ்தானின் வெற்றி
நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள சூழலில் ஓப்பனிங் வீரரான முகமது ரிஸ்வானுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான முதல் போட்டியில் சுருண்டு விழுந்தார். எனினும் அடுத்த போட்டிகளில் சகஜமாக வந்த சூழலில் நேற்று மீண்டும் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தார்.
விலகலா?
இந்நிலையில் அவர் இன்று துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எம்.ஆர். ஐ ஸ்கேன் எடுத்து, பார்க்கப்பட்டுள்ளது. அதில் காயத்தின் தன்மை சற்று மோசமாக இருப்பதாக தெரிவதால் தொடரில் இருந்து விலகும் சூழல் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அப்படி மட்டும் நடந்தால் பாகிஸ்தானுக்கு அது பெரிய இழப்பாகும்.
அட்டகாச ரெக்கார்ட்
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிஸ்வான் தான் முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை 3 போட்டிகளில் 192 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 அரைசதங்களும் அடங்கும். குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக முதல் போட்டியில் 43 ரன்களும், 2வது போட்டியில் 60 ரன்களும் அடித்திருந்தார்.
இறுதிப்போட்டி
பாகிஸ்தான் அணியில் ஏற்கனவே சாஹீன் ஷா அஃப்ரிடி, முகமது வாசீம், ஷானவாஸ் தஹானி என 3 முன்னணி வீரர்கள் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினர். தற்போது ரிஸ்வானும் சென்றுவிடுவார் எனத் தெரிகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பெரும்பாலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தான் மீண்டும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.