லாகூர் : 2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி இன்னும் இந்தியா வருவதற்கான விசா கிடைக்காமல் தவித்து வருகிறது.
இந்த விசா பிரச்சனையால் அந்த அணியின் உலகக்கோப்பை திட்டங்கள் ஆரம்பத்திலேயே சொதப்ப ஆரம்பித்து இருப்பதாகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்-இடம் புகார் அளித்துள்ளது.

குறிப்பாக துபாய் சென்று அங்கே பாகிஸ்தான் வீரர்களை ஒருங்கிணைக்க வைத்திருந்த திட்டமும் கைவிடும் நிலையில் இருப்பதாக புகார் கூறி இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே மைதானத்தை விட அதை சுற்றி பல அரசியல் சர்ச்சைகள் இருக்கும். பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்தால் மைதானத்தை அழித்து விடுவோம் என 12 ஆண்டுகளுக்கு முன் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் போதே மிரட்டல்கள் வந்ததுண்டு.
ஆனால், 2012க்கு பின் இரு அணிகளும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்துவதில்லை. இடையே 2016 டி20 உலகக்கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. அதன் பின் இப்போது தான் மீண்டும் இந்தியா வர உள்ளது பாகிஸ்தான் அணி.
2௦23 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டியில் அந்த அணி முதலில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த பயிற்சிப் போட்டி அக்டோபர் 29 அன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே, அந்தப் போட்டிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என ஹைதராபாத் நகர காவல்துறை கையை விரித்து விட்டது. அந்தப் போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில்தான் நடக்க உள்ளது.
தற்போது அந்தப் போட்டிக்கு சில நாட்கள் முன்பு இந்தியா வரலாம் என எண்ணி இருந்த பாகிஸ்தான் அணிக்கு விசாவும் கிடைக்கவில்லை. ஆசிய கோப்பை முடிந்து இலங்கையில் இருந்து வந்த பாகிஸ்தான் வீரர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் தங்கள் பாஸ்போர்ட்டை வழங்கி விட்டனர்.
ஆனால், இப்போது வரை விசா வழங்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி காத்துக் கொண்டு இருக்கிறது. அந்த அணி இந்தியா வரவேண்டும் என்றால் துபாய் சென்று, அங்கிருந்து வேறொரு விமானத்தில் தான் இந்தியா வர வேண்டும்.
துபாய் சென்று தான் ஆக வேண்டும் என்பதால், அங்கே பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு நாட்கள் தங்கி ஒன்றாக தங்களுக்குள் நேரம் செலவிட்ட பின் இந்தியா கிளம்பிச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
அந்த திட்டம் தற்போது நடக்காது. ஏற்கனவே விசா கிடைக்கத் தாமதம் ஆகி இருப்பதால் பாகிஸ்தான் வீரர்கள் துபாய் சென்று உடனே இந்தியாவுக்கு அடுத்த விமானத்தில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தான் ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு புகாராக கூறி இருக்கிறது.