லாகூர்: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததையடுத்து, தனது மருமகன் ஷாஹீன் அப்ரிடிக்கு கேப்டன் பதவி வழங்கியது ஏன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், தேர்வுக்குழுவையும் முன்னாள் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது பாகிஸ்தான் அணி படுதோல்விகளை சந்தித்தது. அதன் பின் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் மீண்டும் பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியிடம் 2 - 1 என தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஷாஹித் அப்ரிடி, 2026 டி20 உலகக்கோப்பையில் அணியின் மோசமான செயல்பாட்டை பார்த்தீர்கள். அதன்பிறகு தற்போது வங்கதேச தொடரிலும் 1-2 என தோற்றுள்ளோம். தேர்வுக்குழுவில் உள்ள நீங்கள் அனைவரும் இவ்வளவு கிரிக்கெட் விளையாடியிருந்தும், எந்த வடிவிலான போட்டிக்கு யாரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட உங்களிடம் இல்லை என சாடியுள்ளார்.
மேலும், அணியில் சர்ஜரி செய்கிறோம் என்ற பெயரில் மோசமான முடிவுகளை எடுக்கிறீர்கள். ஒருநாள் போட்டிகளில் சிறந்த ரெக்கார்டு வைத்துள்ள மூத்த வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, ஒருசில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடிய இளம் வீரர்களை அணியில் சேர்க்கிறீர்கள். நமது உள்ளூர் கிரிக்கெட்டின் தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. அப்படி இருக்கையில் இளம் வீரர்களை நேரடியாக தேசிய அணிக்கு கொண்டு வந்து தொப்பியை மாற்றி மாற்றி வழங்குவது சர்ஜரி கிடையாது. உண்மையான சர்ஜரியை முதலில் தேர்வுக்குழு மீது தான் செய்ய வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

வங்கதேச தொடருக்கான அணியில் இருந்து பாபர் அசாம் மற்றும் சயீம் அயூப் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். பாபர் அசாம் கடந்த ஒருநாள் தொடரில் சதம் அடித்திருந்தும் அவரை நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு பதிலாக மாஸ் சதாக்கத், ஷமில் உசேன், காசி கோரி, சாத் மசூத், சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் அப்துல் சமத் ஆகிய 6 வீரர்களுக்கு இந்த தொடரில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட 2வது ஒருநாள் போட்டியில் மாஸ் சதாக்கத் மட்டுமே 45 பந்துகளில் 76 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சற்று ஆறுதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
