மும்பை : நெருப்பில்லாமல் புகையாது என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த வகையில் ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கு பெற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வீரர்களுக்கு மத்தியில் பிரச்சனை இருப்பதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒரு விஷயத்தைப் பற்றி சம்பந்தப்பட்ட நபர்கள் திரும்பத் திரும்ப மறுத்து பேசினால் அப்போது பிரச்சினை இருக்கிறது என்று தானே அர்த்தம். அதுதான் தற்போது பாகிஸ்தான் அணியில் நடைபெற்று வருகிறது.

ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு பாபர் அசாம் தெரிவித்த கருத்து வீரர்களிடையே பிளவு ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக இருப்பதாக பாபர் அசாம் அண்மையில் விளக்கம் அளித்து வந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய பயிற்சி ஆட்டத்தில் பாபர் அசாம் தாம் விளையாட மாட்டேன் என்று வெளியே அமர்ந்து விட்டார். இது பாகிஸ்தான் ரசிகர்களை சந்தேகம் அடைய செய்திருக்கிறது.
ஏனென்றால் ஆஸ்திரேலியா போன்ற முக்கிய அணிக்கு எதிரான பவுலர்களை எதிர்கொண்டால் மட்டுமே பாபர் அசாம் போன்ற பேட்ஸ்மன்களுக்கு நம்பிக்கை அதிகமாகும். ஆனால் பாபர் அசாம் இந்த ஆட்டத்தில் தான் வெளியே அமர்ந்து கொண்டிருப்பதாக கூறிவிட்டார். இதனை தற்காலிக கேப்டனாக களம் இறங்கியுள்ள சதாப் கான் உறுதிப்படுத்தி இருக்கிறார். டாசின் போது ரமீஸ் ராஜா கேட்ட கேள்விக்கு பாபர் அசாம் நன்றாக தான் இருக்கிறார்.
அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று அவரே சொன்னார். அதேபோல் முகமது ரிஸ்வானுக்கும் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் ஓய்வு கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக நாங்கள் ஒரே குடும்பமாக இருக்கிறோம். நாங்கள் நல்ல நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்கின்றோம். இதுதான் எங்களுடைய அணியின் அழகே.
நாங்கள் வென்றாலும் ஒரு அணியாக வெல்வோம். தோற்றாலும் ஒரு அணியாக தோற்போம். வெற்றி பெறும் பழக்கத்தை நாங்கள் கற்றுக் கொள்ள விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதன் மூலம் உத்வேகம் பெறுவோம். இன்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் பேட்டிங் மட்டும்தான் செய்ய மாட்டார். ஆனால் ஃபீல்டிங் செய்வார். மேலும் எங்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் ஜூஸ்கள் அனைத்தையும் கொண்டு வந்து கொடுப்பார் என்று சிரித்துக் கொண்டு சதாப் கான் கூறியிருக்கிறார்.