ஹைதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது.
பாகிஸ்தான் அணி தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆடி முடித்துள்ள நிலையில், அந்த அணியின் ஸ்பின்னர் முகமது நவாஸ் இந்தியாவில் உள்ள மைதானங்கள் குறித்து விமர்சனம் வைத்துள்ளார்.

இதில் பிசிசிஐ செய்த தவறு ஒன்றும் உள்ளது. அதை குத்திக் காட்டுவது போலவே நவாஸ் பேசி இருக்கிறார்.
பாகிஸ்தான் அணி ஹைதராபாத்தில் மட்டுமே தனது உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகள் மற்றும் முதல் உலகக்கோப்பை போட்டியையும் ஆடியது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அணி ஒரே இடத்தில் அதிக போட்டிகளில் ஆடுவது போல அட்டவணை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய தன் அனுபவ குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மைதானங்கள் பேட்டிங் செய்ய சாதகமாக உள்ளன. ஆனால், தொடரின் பாதியில் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இது மாறும். பவுண்டரிகள் மிகவும் சிறியதாக உள்ளது. இது பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக உள்ளது." என் கூறி இருக்கிறார்.
ஒரே ஒரு இந்திய மைதானத்தில் மட்டுமே ஆடி உள்ள முகமது நவாஸ் அனைத்து இந்திய மைதானங்கள் குறித்தும் விமர்சனம் வைத்துள்ளார். இதற்கு பிசிசிஐ செய்த தவறு ஒன்றும் காரணம். ஐசிசி அறிவுறுத்தலை பிசிசிஐ சரியாக செய்யாமல் சொதப்பி இருக்கிறது.
அதாவது, 2023 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஐசிசி, அனைத்து மைதானங்களின் பவுண்டரி எல்லையும் 70 மீட்டர் வரை இருக்க வேண்டும். அப்போது தான் பேட்ஸ்மேன் - பவுலர் இடையே ஆன அந்த போட்டி சிறப்பாக இருக்கும். போட்டி சுவாரசியமாக இருக்கும் என கூறி இருந்தது.

ஆனால், பல மைதானங்களில் 70 மீட்டர் வரை பவுண்டரி வைக்க இடமே இல்லை. அந்த அளவுக்கு பவுண்டரி எல்லைகளை ஐபிஎல் தொடருக்காக சுருக்கி வைத்திருந்தது பிசிசிஐ. பாகிஸ்தான் ஆடிய ஹைதரபாத் மைதானத்தில் முன் பக்கம் 70 மீட்டரை ஒட்டியும், பின் பக்கம் வெறும் 57 மீட்டரும் தான் பவுண்டரி எல்லை இருந்தது.
அதை தான் குத்திக் காட்டி பேசி இருக்கிறார் பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ். எனினும், ஒரே மைதானத்தில் தான் இரண்டு அணிகளுமே ஆடுகின்றன. அதனால், மைதானத்தை குறை கூறுவதை விட்டுவிட்டு எப்படி பயன்படுத்தி போட்டியில் வெல்லலாம் என்பதை சிந்திப்பதே சரியாக இருக்கும்.