சாம்பியன்ஸ் ட்ராபி தோல்வி
ஜூலை 2017இல் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இங்கிலாந்தில் நடந்த அந்த தொடரில் அஸ்வின், ஜடேஜா இருவரும் சரியாக பந்து வீசவில்லை, விக்கெட் வீழ்த்தவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
ஜடேஜா இடம் பெற்றார்
அத்துடன் அவர்கள் இருவரையும் அணியை விட்டு நீக்கியது இந்திய அணி நிர்வாகம். அதில் இருந்து மீண்டு ஜடேஜா இந்திய அணியில் இடம் பெற்றார். அவர் ஆல் - ரவுண்டர் என்ற தகுதியில் தான் அணியில் மீண்டும் இடம் பெற்றார்.
மணிக்கட்டுசுழற் பந்துவீச்சாளர்கள்
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணியின் மணிக்கட்டு வகை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அஸ்வின், ஜடேஜா இருவரும் விரலை பயன்படுத்தும் சுழற் பந்துவீச்சாளர்கள். அது பயனளிக்கவில்லை என்ற முடிவுக்கு கேப்டன் கோலி வந்ததாலேயே மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
டெஸ்ட் அணியும் சிக்கல்
ஆனால், அஸ்வின் டெஸ்ட் அணியில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தார். அவருக்கு ஒருநாள் அணியில் அதன் பின் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டெஸ்ட் அணியிலும் கூட அவர் இடம் ஊசலாடிக் கொண்டு இருப்பதாகவே அவ்வப்போது தகவல்கள் வருகின்றன.
ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும்
இந்த நிலையில், இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக் அஸ்வினை மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்றார். சக்லைன் முஷ்டாக் தான் தூஸ்ரா என்ற வகை சுழற் பந்துவீச்சை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திறமை தான் முக்கியம்
"திறன் என்பது நிலையானது. நீங்கள் விரலை பயன்படுத்தும் சுழற் பந்துவீச்சாளரோ, மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளரோ அது முக்கியமல்ல. திறமை, விளையாட்டை புரிந்து கொள்ளும் தன்மை இதுதான் முக்கியம். ஒருநாள் அணியில் அஸ்வினை தள்ளி வைத்திருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது" என்றார் முஷ்டாக்.
விக்கெட் எடுப்பது தான் முக்கியம்
"அஸ்வினுக்கு ஐந்து நாள் போட்டிகளில் எப்படி பேட்ஸ்மேனை வீழ்த்துவது என்பது தெரிந்துள்ளது. அது ஒருநாள் போட்டிகளில் வீழ்த்துவதை விட கடினம். ரன்களை கட்டுப்படுத்தும் வேலையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், விக்கெட் எடுப்பவரால், ரன்களை கட்டுப்படுத்தவும் முடியும்." என்றார் சக்லைன் முஷ்டாக்.
அஸ்வினுக்கு இரண்டுமே தெரியும்
"அஸ்வினுக்கு அது இரண்டுமே தெரியும். அவரை எப்படி அணியை விட்டு வெளியே வைத்து இருக்கிறீர்கள்? உங்கள் சிறந்த வீரர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என அஸ்வினை ஒருநாள் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார் சக்லைன் முஷ்டாக்.
ஹர்பஜன் சிங் ஆதரவு
அதே போல, அஸ்வினுக்காக ஹர்பஜன் சிங்கை அணியை விட்டு நீக்கி விட்டார்கள். இருவரும் ஒரே நேரத்தில் ஆடி இருக்கலாம் என்றும், ஹர்பஜன் சிங் மிக எளிதாக 700 விக்கெட்களுக்கு மேலாக வீழ்த்தி இருப்பார் என்றும் கூறினார் சக்லைன் முஷ்டாக்.