முதலில் சானியா மிர்சா... இப்போ ஷமையா அர்ஜூ...! ஒரு வாழ்த்து சொல்லலாமே..?
இஸ்லாமாபாத்: சோயிப் மாலிக், சானியா மிர்சாவை திருமணம் செய்ததை போன்று, இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக், இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்தார். அவரது திருமணத்தை பாகிஸ்தான், இந்தியா ரசிகர்கள் பரபரப்பாக விவாதித்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். அவர் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி. 2016ம் ஆண்டு சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார்.

50 விக். வீழ்த்தியவர்
அடுத்த ஆண்டிலேயே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருது பெற்று கிரிக்கெட் உலகத்தை ஆச்சரியப்பட வைத்தார். அதி விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் 2017ம் ஆண்டு படைத்தார்.

காதல் கல்யாணம்
அதே ஆண்டு சிறந்த பாகிஸ்தான் வீரர் என்ற விருதினையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தட்டி சென்றார். ஹசன் அலி தற்போது ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷமையா என்பவரை காதல் திருமணம் புரிய உள்ளார்.

உதவிய நண்பர்
ஷமையா இன்ஜினியராக எமிரேட்ஸ் ஏர்லைன்சில் பணிபுரிகிறார். ஹசன் அலி மற்றும் ஷமையா ஆகியோர் அவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமாகி பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

துபாயில் வசிக்கிறார்
ஷமையா அரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டாலும் தற்போது பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறார். அவர்களது திருமணம் ஆகஸ்ட் 20ம் தேதி துபாயில் நடை பெறுகிறது. துபாய் அட்லாண்டிஸ் பாம் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications