லாகூர் : பிசிசிஐ க்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சையத் அப்ரிடி ஆதரவாக பேசியிருப்பது இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை தொடரை நடத்த பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும் இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் சொன்ன யோசனையும் பிசிசிஐ அங்கீகரித்துள்ளது. இதனை அடுத்து ஆசிய கோப்பைத் தொடர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அடம் பிடித்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளது. எனினும் பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர் சையத் ஆப்ரிடி கடும் கண்டனம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் அகமதாபாத்தில் விளையாட உங்களுக்கு என்ன தயக்கம் இருக்கிறது. ஏன் அங்கு சென்று விளையாட மறுக்கிறீர்கள். அது என்ன நெருப்பால் ஆன ஆடுகளமா இல்லை அங்க பேய் பிசாசு என ஏதாவது இருக்கிறதா? அகமதாபாத்துக்கு செல்லுங்கள் அங்கு போய் விளையாடுங்கள் வெற்றி பெறுங்கள். அகமதாபாத்தில் உங்களுக்கு சவாலான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவதே நல்லது.
எல்லாத்தையும் விட பாகிஸ்தான் அணியின் வெற்றி தான் முக்கியம். அகமதாபாத்தில் விளையாடுவதை இந்தியா சாதகம் என்று நினைத்தால் நீங்கள் அங்கு தான் செல்ல வேண்டும்.ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் முன் நீங்கள் விளையாடி வெற்றி பெறுங்கள். உங்களிடம் என்ன திறமை இருக்கிறது என்று ரசிகர்கள் முன் காட்டுங்கள். அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவதை நீங்கள் எதிர்மறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார். அப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.