உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் முதலில் பேசிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக், நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன். அவர் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்.

தொடர்ந்து சண்டை செய்வார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு இருக்கும் வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது விராட் கோலி முன்பு போல் இல்லை கொஞ்சம் அமைதியாகிவிட்டார். விராட் கோலி போல் திறமை வாய்ந்த வீரர்கள் பலரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கலாம். ஆனால் அவருக்குள் இருக்கும் வெறி மன வலிமை யாருக்குமே கிடையாது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சதாப் கான், விராட் கோலி ரன் அடிக்க வேண்டும் என்ற தீராத பசி என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. அவர் உண்மையான ஜாம்பவான் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய முஹமது ரிஸ்வான், விராட் கோலி களத்தில் நின்று 10, 15 பந்துகளை பிடித்து விட்டால் அவர் மிகவும் அபாயகரமான வீரராக மாறிவிடுவார் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் நான் விராட் கோலிக்கு நெட் பவுலராக பந்து வீசி இருக்கிறேன். பயிற்சியின் போது விராட் கோலிக்கு பந்து பேட்டில் எங்கு படுகிறது என்று நன்றாகவே தெரியும். பல வீரர்களுக்கு இது தெரியாது. அப்போது எனக்கு தெரியும் அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் வீரர் என்று, ஏனெனில் பயிற்சியின் போது கூட அவர் குறிக்கோளுடன் ஆக்ரோஷமாக செயல்படுவார்.