லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் திடீரென சம்பள உயர்வு கேட்டு வருவதும், பல முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கச் சென்றதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் கடுமையான எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டு பிஎஸ்எல் போட்டிகள் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்திற்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி மற்றும் லாகூர் ஆகிய 2 நகரங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளன. திட்டமிடப்பட்டிருந்த பிரம்மாண்ட தொடக்க விழாவும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 26ஆம் தேதி பிஎஸ்எல் தொடங்க உள்ளது.

இந்த நெருக்கடியான சூழலில், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் மற்றும் போர் பதற்றங்களைச் சுட்டிக்காட்டி, தங்களது ஊதியத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என சில வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரத்தில், ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் கிடைப்பதால் பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் பிஎஸ்எல் ஒப்பந்தத்தை மீறி போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். ஸ்பென்சர் ஜான்சன், ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், தசுன் ஷனகா, ரஹ்மானுல்லா குர்பாஸ், டைமல் மில்ஸ், குடகேஷ் மோட்டி உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் நடப்பு பிஎஸ்எல் சீசனில் இருந்து விலகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் வழங்கப்படும் பிரம்மாண்டமான ஊதியத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்எல் அணிகளால் பணத்தை வாரி வழங்க முடியவில்லை. இதுவே இரு லீக் தொடர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. விலகிய வீரர்கள் மீது தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும், அது எதிர்காலத்தில் பிஎஸ்எல் தொடருக்கு வெளிநாட்டு வீரர்களை ஈர்ப்பதை மிகவும் கடினமாக்கும் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2025ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறியதற்காக தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஷ்க்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டாலும், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரம் குறித்து ஐசிசி உறுப்பினர்களுடன் விவாதிக்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. பெரும்பாலான வீரர்கள் விலகிய போதிலும், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன் மற்றும் தப்ரைஸ் ஷம்சி போன்ற வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் விளையாட பாகிஸ்தான் வந்துள்ளனர். மேலும், நஹித் ராணா, முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட 4 வங்கதேச வீரர்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
