லாகூர்: ஐபிஎல் தொடருக்கு உலகெங்கிலும் எவ்வளவு மவுசு இருக்கிறது என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். டிக்கெட்டுகள் ஆயிரக்கணக்கில் விற்கப்பட்டாலும் ஆன்லைனில் வந்த சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத்தீர்ந்து விடும். ஆனால், பாகிஸ்தானில் நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் நிலைமையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. மைதானத்தில் ஈ ஆடுவதை தவிர்க்க, வெறும் 250 பாகிஸ்தான் ரூபாய்க்கு டிக்கெட்டுகளை சந்தையில் காய்கறி விற்பது போல் கூவி கூவி விற்று வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
பிஎஸ்எல் 11 வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 10 லீக் போட்டிகளில் விளையாடவுள்ளன. இதில் ஐபிஎல் தொடரை அப்படியே ஜெராக்ஸ் காப்பியடித்து, குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி என பிளே ஆஃப் சுற்றுகளை பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், ஐபிஎல் தொடர் நடக்கும் அதே தேதிகளில் தான் இந்த தொடரையும் நடத்துவோம் என பாகிஸ்தான் வீம்பு பிடித்து அதே தேதிகளில் தொடரை நடத்தவுள்ளது.

இந்த தொடருக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 17 ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளது. நேரடியாக டிக்கெட் வாங்கும் வசதி மார்ச் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இ-டிக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளன. இத்தனை ஆண்டுகளில் மிக அரிதாகவே பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடந்த மைதானங்கள் நிறைந்து காணப்பட்டு உள்ளது. அப்படி இருக்க முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என "பாவ்லா" காட்டி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

இந்த நிலையில், எப்படியாவது ரசிகர்களை மைதானத்திற்குள் இழுத்துவிட வேண்டும் என்ற தீவிரமான மற்றும் பரிதாபமான முயற்சியில், டிக்கெட் விலையை வெறும் 250 பாகிஸ்தான் ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். இதன் இந்திய மதிப்பு வெறும் 82 ரூபாய் மட்டுமே. இந்தியாவில் ஒரு நல்ல ஹோட்டலில் ஒரு பிளேட் பிரியாணி சாப்பிடவே 200 ரூபாய் தேவைப்படும் நிலையில், 82 ரூபாய்க்கு ஒரு கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் கொடுப்பது பலரையும் மீம்ஸ் போட வைத்துள்ளது. இந்த மெகா தள்ளுபடி விலையில் விற்றாலும் மைதானத்திற்கு பாகிஸ்தான் மக்கள் வருவார்களா என்ற கேள்வி உள்ளது.
