லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர், ஐபிஎல் தொடரை விட சிறந்தது என்று லாகூர் கலந்தர்ஸ் அணியின் உரிமையாளரும், அந்நாட்டின் அரசியல்வாதியுமான ஆதிஃப் ரானா தெரிவித்துள்ளார். வீரர்கள் தேர்வுக்கான டிராஃப்ட் (Draft) முறையே போட்டித்தன்மையை உறுதி செய்வதாகவும், இது லீக்குக்கு ஒரு தனித்துவமான பலம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
IPL உள்ளிட்ட மற்ற டி20 லீக்குகளில் பின்பற்றப்படும் ஏல முறையிலிருந்து PSL டிராஃப்ட் முறை முற்றிலும் மாறுபட்டது. அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டுத் தொடர்களைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்ட இதில், வீரர்கள் பிளாட்டினம், டயமண்ட், கோல்ட், சில்வர், எமர்ஜிங் என வெவ்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகிறார்கள். அணிகள் ஒரு குறிப்பிட்ட வரிசைப்படி வீரர்களைத் தேர்வு செய்கின்றன. ஏலப்போட்டிகள் இல்லாததால், கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்த அணிக்கு முதல் வீரரைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது, இது போட்டித்தன்மையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.

ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எங்கள் கிரிக்கெட் திறமையும், போட்டித்தன்மையும் எந்த லீக்கையும் விட சிறந்தது. கிரிக்கெட்பூர்வமாகப் பார்த்தால், PSL உலகின் நம்பர் ஒன் லீக். அதற்குக் காரணம் டிராஃப்ட் முறைதான். அணிகள் போட்டித்தன்மையுடன் உள்ளன. கடந்த நான்கு இறுதிப் போட்டிகளைப் பாருங்கள், அனைத்தும் கடைசி ஓவரில் அல்லது கடைசி பந்தில் தான் முடிவெடுக்கப்பட்டன. இந்த டிராஃப்ட் முறைதான் லீக்கின் தரத்தையும் சமநிலையையும் நிலைநிறுத்தி வருகிறது என்று நான் நம்புகிறேன்” என்று ஆதிஃப் ரானா குறிப்பிட்டார்.
பொதுவாக, ஏலப் போட்டிகள் சிறந்த வீரர்களுக்கு அதிக பணத்தைக் கொண்டுவரும் என்பதால், டிராஃப்ட் முறை வீரர்களுக்குச் சிறந்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ரானா, PSL என்பது தனிநபர்களை விட மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
“இது தனிநபர்கள் அல்லது பிராண்டுகள் பற்றியது அல்ல, PSL பற்றியது. நாமெல்லாம் PSL ரசிகர்கள், வீரர்கள், உரிமையாளர்கள், PCB அனைவரும் PSL-ஐ ஒன்றாக வளர்க்கிறோம். அப்படியிருக்க, டிராஃப்ட்டில் என்ன தவறு நடந்தது? என்ன பாம்பு அதிலிருந்து வெளியே வந்தது என்று மக்கள் பயப்படுகிறார்கள்? நாங்கள் ஏற்கனவே செலுத்தும் பணம், மற்ற பல லீக்குகளுடன் ஒப்பிடும்போது, இன்னும் மிகச் சிறந்ததுதான். மேலும், வலுக்கட்டாயமாக இந்த அமைப்பை மாற்றி, அதிக பணம் செலுத்தினால், பெரிய வீரர்கள் தானாகவே வந்துவிடுவார்கள் என்ற எண்ணம் சரியாகச் செயல்படாது. எங்கள் அனுபவம் அதைத் தெளிவாகக் காட்டுகிறது.” என்றார் அவர்.
“பெரிய வீரர்கள் எங்களுடன் ஆடியுள்ளனர். ரஷீத் கான் PSL-ல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விளையாடினார், அது அவர் IPL-ல் சம்பாதிப்பதைக் காட்டிலும் பல மடங்கு குறைவு. ஹாரி ப்ரூக் தனது முதல் சீசனை எங்களோடு விளையாடினார், பிறகு IPL அவரை தேர்வு செய்தது. டிம் டேவிட் சிங்கப்பூரிலிருந்து வரும்போது எங்களுடன் விளையாடினார். சரியாக நினைவிருந்தால், சுமார் $5,000 டாலருக்கு — அவரது அடுத்த IPL ஒப்பந்தம் $1.6 மில்லியன் டாலராக இருந்தது.”
“ஆகவே, இது விலை நிர்ணயம் பற்றியது அல்ல, தயாரிப்பு பற்றியது. PSL தயாரிப்பு, எங்கள் டிராஃப்ட் அமைத்த தரநிலை – வெறும் மாற்றத்திற்காக ஏன் அதை மாற்ற வேண்டும்? அதனால் என்ன பயன் கிடைக்கும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.ஆனால், ரானாவின் இந்தக் கருத்துக்களுக்கு இடையே ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. ஆம், வரவிருக்கும் 2026 சீசனில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தனது வீரர் தேர்வு முறையை மாற்றி, ஏல முறைக்கு மாறுவது குறித்து பரிசீலித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.