பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதை எதிர்த்து கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜமாத்-உல்-அரார் என்ற ஆயுதக் குழு விடுத்த இந்த மிரட்டல், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி சர்வதேச நட்சத்திரங்கள் உட்பட பல வீரர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதனால், வரவிருக்கும் டி20 தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஆயுதக் குழுவான ஜமாத்-உல்-அரார், தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் ஒரு பிரிவாகச் செயல்படுகிறது. இக்குழு, வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை PSL 2026 தொடருக்காக பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாம் என கடுமையாக எச்சரித்துள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, இந்த மிரட்டல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் பரப்பப்பட்டுள்ளதுடன்.

"சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். அவர்களுக்கு ஏதேனும் நடந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் ஏற்கனவே அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்," என ஜமாத்-உல்-அரார் அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, "ஆம், போட்டிகள் நடைபெறாமலும், வீரர்கள் விளையாடாமலும் இருப்பதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்," என்றும் அந்தத் தளபதி உறுதியாகத் தெரிவித்தார். இந்த நேரடி அச்சுறுத்தல்கள், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருடன் தொடர்புடைய பாதுகாப்புச் சூழல் குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன, மேலும் வீரர்களின் பாதுகாப்புக் குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.
டேவிட் வார்னர் கராச்சி கிங்ஸ் அணியை வழிநடத்தவும், ஸ்டீவ் ஸ்மித் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கவும் உள்ளனர். ஸ்மித் ஏற்கனவே பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஜோடியுடன், மார்னஸ் லாபுஷேன், மொயின் அலி, டெவோன் கான்வே, ஆடம் ஜாம்பா உள்ளிட்ட பல உயர்மட்ட வெளிநாட்டு நட்சத்திரங்களும் PSL 2026 தொடரில் பங்கேற்க உள்ளனர்.
இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, PSL 2026 தொடர் முழுவதும் லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள இரண்டு மைதானங்களில் மட்டுமே, பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படும். மேற்கு ஆசியாவின் மோதலால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாகவே, இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த சீசனில் லாகூர் மற்றும் கராச்சி நகரங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும். "மக்களை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தச் சொல்லிவிட்டு, தினசரி 30,000 பேர் ஸ்டேடியங்களில் கூடுமாறு கேட்க முடியாது," என்று நக்வி விளக்கமளித்தார். "இந்த நெருக்கடி நீடிக்கும் வரை, போட்டிகளில் கூட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று முடிவு செய்தோம். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் அது அவசியமானது," என்றும் அவர் கூறினார். தொடரின் தொடக்க விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 44 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் மார்ச் 26ஆம் தேதி ஆரம்பமாகும். பாதுகாப்புச் சவால்கள் மற்றும் உள்நாட்டு நெருக்கடிகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிஎஸ்எல் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எனினும், வெளிநாட்டு வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த சமீபத்திய அச்சுறுத்தல்கள், தொடருக்கான ஏற்பாடுகளில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.