கொழும்பு: டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஆடிய விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி, பாபர் அசாமை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளதோடு, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் செய்த ஒரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் 148 ரன்களைத் துரத்திய பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தது. ஆனால் பாபர் அசாம் 18 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இது அணிக்குத் திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியது. கடைசி நேரத்தில் பஹிம் அஷ்ரஃப் போராடித்தான் அணியை வெற்றி பெறச் செய்தார்.

பாபர் அசாமின் மெதுவான ஆட்டம் குறித்துப் பேசிய முன்னாள் வீரர் பாசித் அலி, "பாபர் அசாமை டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளில் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவர் எப்படிச் சூப்பர் ஸ்டார் ஆனார்? நான்காவது வரிசையில் இறங்கி அவரால் ஜொலிக்க முடியவில்லை. இது தனக்குச் செட் ஆகாது என்று அணி நிர்வாகத்திடம் சொல்லும் தைரியம் கூட அவருக்கு இல்லை" என்று விளாசினார்.
மேலும் அவர், "ஒரு கிளப் கிரிக்கெட் வீரரைக் கேட்டால் கூடச் சொல்வார்கள், டி20 வடிவத்தில் பாபர் அசாமை விட ஷதாப் கான், உஸ்மான் கான், முகமது நவாஸ் மற்றும் பஹிம் அஷ்ரஃப் ஆகியோர் சிறந்த வீரர்கள் என்று. ஏன், அணியில் உள்ள இளம் வீரர்களான சயிம் அயூப் மற்றும் சாஹிப்சாதா பர்ஹான் கூட அவரை விடச் சிறப்பாக ஆடுகிறார்கள்" என்று அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டினார்.
பிக் பாஷ் லீக் தொடரில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து பாசித் அலி பேசினார். "ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். பாபர் அசாமுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் ரன் வராது என்று தெரிந்து, ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் ஓட மறுத்தார். அந்த அவமானத்திற்குப் பிறகும் பாபர் அசாம் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவரது ஆட்டம் டி20 போட்டிக்கு ஏற்றது அல்ல" என்று காட்டமாகப் பேசினார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்க்கும்போது, அடுத்த போட்டியில் பாபர் அசாமுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான் என்றும் பாசித் அலி கணித்துள்ளார்.
மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல், "பாபர் அசாமை வலுக்கட்டாயமாக நான்காவது இடத்தில் திணிக்கிறார்கள். தனிப்பட்ட வீரர்களுக்காக அணியின் நலனைப் பலிகொடுக்கிறார்கள். ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்படும்போது பாபர் அசாம் எப்போதாவது அதிரடியாக ஆடி வெற்றியைத் தேடித்தந்துள்ளாரா?" என்று கேள்வி எழுப்பினார். நெதர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராகவே பாபர் அசாம் திணறியது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.