கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்குச் இரண்டு பெரிய ஆபத்துகள் காத்திருக்கின்றன. இந்த இரண்டு விஷயங்களும் பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பினால், அந்த அணி குரூப் சுற்றோடு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. ஆனால், அந்த அணியின் கவனம் முழுக்க இந்தியாவுடனான மோதல் மற்றும் ஐசிசி உடனான பனிப்போர் மீதே உள்ளது.

வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறப்போகிறது. இந்தப் போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தானுக்குப் புள்ளிகள் கிடைக்காது என்பது ஒருபுறம் இருக்க, நிகர ரன் ரேட் (Net Run Rate) கணக்கீட்டில் அவர்களுக்குப் பெரிய அடி விழும்.
விதிமுறைப்படி, ஒரு அணி போட்டியைப் புறக்கணித்தால், அந்த அணி 20 ஓவர்களும் விளையாடி 0 ரன்கள் எடுத்ததாகக் கணக்கிடப்படும். இப்படி ஒரு கணக்கீடு வந்தால், பாகிஸ்தானின் நிகர ரன் ரேட் அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும். நூலிழை வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் டி20 தொடரில், இது தனக்கு தானே குழி தோண்டிக் கொள்ளும் முடிவாகும்.
உதாரணத்திற்கு பாகிஸ்தான் இந்தியாவுடன் ஆடாமல் தங்கள் பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடி அதில் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலோ, அல்லது பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலோ குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதில் சிக்கல் எழும். அப்போது மற்ற அணிகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் இரண்டாம் இடம் பிடிக்க போட்டி போட வேண்டிய நிலை வரும். ஆனால், இந்தியா உடனான போட்டியை புறக்கணித்ததால் அந்த அணியின் ரன் ரேட் பாதாளத்தில் இருக்கும். அது பாகிஸ்தான் அணியை குரூப் சுற்றுடன் வெளியேற்றும்.
ஏற்கனவே ரன் ரேட் பிரச்சனை இருக்கும் சூழலில், இயற்கையும் பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. பாகிஸ்தான் விளையாடவுள்ள போட்டிகளில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய தொடக்க ஆட்டத்தில்கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணித்து, மற்ற போட்டிகள் மழையால் ரத்தாகி புள்ளிகள் பகிரப்பட்டால், பாகிஸ்தான் அணியால் அடுத்த சுற்றுக்கு (சூப்பர் 8) முன்னேற முடியாது. கடந்த உலகக்கோப்பையைப் போலவே இம்முறையும் குரூப் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேற வேண்டியதுதான்.
இதற்கிடையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, தனது அணியின் நிலைமையை மறைத்துக்கொண்டு இந்தியா மீது பழிபோட்டுள்ளார். "விளையாட்டு வீரர்கள் அரசியல் பேசக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் கடந்த சில தொடர்களாகக் கிரிக்கெட்டை விட மற்ற விஷயங்களே அதிகம் பேசப்படுகின்றன. பாதுகாப்பு காரணம் என்று கூறி இந்தியா பாகிஸ்தான் வராமல் இருப்பது விளையாட்டுக்கு நல்லதல்ல. நாம் குழந்தைகளுக்குத் தவறான முன்னுதாரணமாக இருக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல் அரசியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அணி, சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளது என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.