
ஆசிய கோப்பை தொடர்
இந்திய அணி கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் உள்ளது. இப்படி இருக்கையில் அடுத்தாண்டு பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பையில் பங்கேற்கும் என்றே தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல் பிசிசிஐ-ம் வீரர்களின் விசா ஏற்பாடுகள் என்னவென்பது குறித்து திட்டம் வகுத்து வந்தனர்.
ஆனால் நேற்று திடீரென மாற்றி அறிவிக்கப்பட்டது.

பின் வாங்கிய இந்தியா
பிசிசிஐ-ன் செயலாளரான ஜெய் ஷா, ஆசிய கோப்பை கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார். இதுகுறித்து நேற்று பேசிய அவர், ஆசியக்கோப்பைகாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல விருப்பமில்லை என தெரிவித்தார். மேலும் ஆசியக்கோப்பையை பாகிஸ்தானில் இருந்து விலக்கி, பொதுவான ஒரு இடத்தில் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பாக். பதிலடி
இந்நிலையில் ஜெய் ஷாவின் அறிவிப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. அதாவது, இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஆசிய கோப்பை கவுன்சிலில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக முடிவெடுத்துள்ளது. அந்த தொடரில் முக்கிய அணியாக உள்ள பாகிஸ்தான் இனி பங்கேற்காது என அதிரடி முடிவெடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பையிலும் கைவைத்துள்ளனர்.

உலகக்கோப்பையும் இல்லை
2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக இந்தியாவுக்கு பாகிஸ்தான் பயணம் செய்யாது என்றும், அப்படி கட்டாயப்படுத்தினால் விலகிவிடும் எனவும் முடிவெடுத்துள்ளது. ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் தான் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. தற்போது அதற்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications