கராச்சி: இந்தியாவிடம் தோல்வியடைந்தால் கூட பிரச்சனையில்லை என்றும், தங்களின் நோக்கம் உலகக்கோப்பையை வெல்வதே என்றும் பாகிஸ்தான் வீரர் ஷடாப் கான் தெரிவித்துள்ளார்.
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டதில் இருந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் வீரர்களும் உலகக்கோப்பைத் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி 2016ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

அதுமட்டுமல்லாமல் 1.32 லட்சம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இப்போதே முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 30 மடங்கு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்தும் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷடாப் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதே வேறு மாதிரியான உற்சாகத்தை அளிக்கும். எங்களுக்கு வேறு மாதிரியான அழுத்தம் இருக்கும். அதேபோல் மைதானத்திற்கு நாங்கள் செல்வதற்கு முன்பாகவே இந்திய அணி ரசிகர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் எங்களுக்கு எதிராக இருப்பார்கள்.
இந்தியாவுக்கு உலகக்கோப்பையை தான் விளையாட செல்கிறோம். இது வெறும் இந்திய அணிக்கான தொடர் மட்டுமல்ல. உலகக்கோப்பையை வெல்வதற்கான தொடராகும். அதனால் லீக் சுற்றில் இந்திய அணியை வென்றால் மட்டும் போதாது. இந்திய அணியை வென்றுவிட்டு உலகக்கோப்பையை வெல்லவில்லை என்றால், எங்களுக்கு எந்த பலனும் இல்லை. சரியாக சொன்னால் இந்தியா அணியுடன் தோற்றால் கூட பிரச்சனையில்லை. உலக்கோப்பையை வெல்வதே எங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்,