துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தங்களை அவமானப்படுத்தும் வகையில் சம்பவங்கள் நடந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொந்தளித்து இருக்கிறது. அதற்காக சர்வதேச கிரிக்கெட் அமைப்புக்கு (ICC) எதிராக தாங்கள் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்று நடத்தியது. சர்வதேச கிரிக்கெட் அமைப்புடன் சேர்ந்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. ஆனால், இதில் பல்வேறு விஷயங்களில் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் தற்போது குற்றம் சுமத்தியுள்ளது. அதில் உச்சகட்டமாக 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வழங்கும் விழாவில் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி கூட மேடையில் இடம் பெறவில்லை.

இது மட்டும் இன்றி இந்தத் தொடரில் மேலும் இரண்டு சம்பவங்கள் பாகிஸ்தானை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாக தற்போது அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய போட்டி ஒளிபரப்பின் போது, சாம்பியன்ஸ் டிராபி லோகோவில் பாகிஸ்தான் என்ற பெயர் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் நடந்த போட்டிகளின் போது பாகிஸ்தானின் பெயர் இடம் பெற்றது. அத்துடன் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. அதேபோல லாகூரில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான குரூப் சுற்று போட்டியின் போது, முதலில் இந்திய தேசிய கீதம் ஒளிபரப்பானது. அப்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் தேசிய கீதம் தான் ஒளிபரப்பப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால், தவறுதலாக இந்திய தேசிய கீதம் ஒளிபரப்பானது. பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி ஆடாத நிலையில் இந்தியாவின் தேசிய கீதம் ஒளிபரப்பானது பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொழில்நுட்ப கோளாறு தான் என ஐசிசி பின்னர் விளக்கம் அளித்தது.
தற்போது இந்த இரண்டு விவகாரங்களையும் குறிப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகவும், தங்களுக்கு இறுதிப்போட்டி பரிசளிப்பு விழாவில் இடம் அளிக்காதது குறித்து விளக்கம் கேட்க உள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி இறுதிப் போட்டியின் போது துபாய்க்கு வரவில்லை. அதனால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த யாரையும் மேடைக்கு அழைக்கவில்லை என ஐசிசி விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்துள்ளது.