மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக இன்னும் மிச்சமுள்ளது. இருப்பினும், இந்த வாய்ப்பு சாத்தியமற்றது என்றும், பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்பே இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது பாணியில் கிண்டல் செய்துள்ளார்.
சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கும் என்ற நிலை இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இது பாகிஸ்தான் ரசிகர்களுக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. தற்போது பாகிஸ்தான் அணி தனது கடைசிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு குறித்து பேசிய வீரேந்திர சேவாக், பாகிஸ்தான் ரசிகர்கள் இங்கிலாந்து ஜெயிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள், அது நடந்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு அது நடக்காது என்று தடாலடியாகக் கூறியுள்ளார்.
"பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்குச் செல்லவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களின் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு நீண்ட காலமாகவே அந்தப் பிரார்த்தனைகள் கைகொடுப்பதில்லை. அதனால் அவர்கள் அரையிறுதிக்குத் தகுதி பெறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை அப்படித் தகுதி பெற்றால் அது மிகவும் நல்லது தான். ஆனால் அது நடக்கப்போவதில்லை" என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால், முதலில் பேட்டிங் செய்து 160 ரன்கள் எடுத்தால், இலங்கையை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அல்லது 160 ரன்களைத் துரத்தினால், சுமார் 14 ஓவர்களிலேயே (40 பந்துகள் மீதமிருக்கையில்) வெற்றி பெற வேண்டும்.
இந்தக் கடினமான சூழல் குறித்துப் பேசிய சேவாக், "பாகிஸ்தான் அணி 160 ரன்கள் எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால், இலங்கை அணி மிகவும் மோசமாக விளையாடி 90 ரன்களில் சுருள வேண்டும். அது சாத்தியமில்லை. அதேபோல, 160 ரன்களை 14 ஓவர்களில் பாகிஸ்தான் துரத்த வேண்டும் என்பதும் நடக்காத காரியம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்தார். "முதலில் 160 ரன்களை விரைவாக அடிப்பதைப் பற்றி மறந்துவிடுங்கள். பாகிஸ்தான் அணியால் தொடர்ந்து 20 ஓவர்களிலேயே 160 ரன்களை அடிக்க முடிவதில்லை. அப்படி இருக்கையில் 14 ஓவர்களில் எப்படி அவர்களால் 160 ரன்களை அடிக்க முடியும்? அதனால்தான் சொல்கிறேன், பாகிஸ்தான் மக்களின் பிரார்த்தனை இங்கிலாந்து வெற்றிக்கு மட்டுமே வேலை செய்தது, பாகிஸ்தானுக்கு வேலை செய்யாது" என்று சேவாக் கூறினார்.

இதே விவாதத்தில் கலந்துகொண்ட மற்றொரு முன்னாள் வீரரான மனோஜ் திவாரி, பாகிஸ்தானுக்குச் சிறிய நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். "இலங்கை அணி கடந்த இரண்டு போட்டிகளாகச் சரியாக விளையாடவில்லை. இது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமையலாம். சஹிப்சாதா ஃபர்ஹான் அதிக ரன்கள் குவித்து வருகிறார். ஃபக்கர் ஜமான் அணியில் இணைந்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடினால் ஒருவேளை அதிசயம் நிகழலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.