பெர்த் : தன்னுடைய குருநாதரே அஸ்வின் தான் என்று ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் நாதன் லயான் கூறியிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை பெர்த் நகரில் தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்க உள்ள நாதன் லயான் 500 விக்கெட்டுகளை தொட இருக்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய வீரர் லயான், நீங்கள் அஸ்வினை பாருங்கள். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்.

என் கிரிக்கெட் ஆரம்ப காலத்தில் இருந்தே நான் அஸ்வினை கவனித்து வருகிறேன். அவருடைய நுணுக்கங்கள் குறித்து நான் எப்போதுமே பார்ப்பதுண்டு. நாங்கள் இருவரும் எதிருக்கு எதிராக மோதிக் கொண்டிருக்கிறோம். பல கடினமான சூழல்களில் விளையாடி இருக்கிறோம். எனக்கு எப்போதுமே அஸ்வின் மீது தனி மரியாதை இருக்கிறது.
நான் அஸ்வினின் பந்துவீச்சில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கின்றேன். நான் எப்போதும் யாருக்கு எதிராக விளையாடுகிறோமோ அவர்களிடம் இருந்து நல்ல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். எனக்கே தெரியாமல் அஸ்வின் என்னுடைய கிரிக்கெட் குருநாதர் ஆக கூட விளங்கி இருக்கிறார்.நாங்கள் இருவரும் 500 விக்கெட் என்ற மைல் கல்லை நோக்கி செல்ல இருக்கிறோம்.
அதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இருவரும் எவ்வளவு விக்கெட் எடுக்கப் போகிறோம் என்பது குறித்து இன்னும் எனக்கு தெரியவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பிறகு நான் அஸ்வினுடன் அமர்ந்து மது அருந்திவிட்டு நிறைய விஷயங்கள் பேச வேண்டும் என நினைக்கிறேன். அஸ்வினை இந்தியாவுக்கு வெளியே கொண்டாடப்படுவதை விட இந்தியாவில் அவரை யாரும் அவ்வளவாக கொண்டாடுவதில்லை என்றும் நாதன் லயன் கூறியிருக்கிறார்.
122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நாதன் லயான் 496 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 489 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். அதிவேகமாக 500 விக்கெட்டுகளை தொட்ட வீரர் என்ற பெருமை இன்னும் முரளிதரன் இடமே இருக்கிறது. அவர் 87 டெஸ்ட் போட்டிகளில் அந்த மைல்கல்லை தொட்டார்.