பெர்த் : ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 14ஆம் தேதி வியாழக்கிழமை பெர்த் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கவாஜா விளையாட போகிறார்.
இந்த நிலையில் கருப்பின மக்களுக்கு ஆதரவாக பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற வாசகத்தை ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் பயன்படுத்தினார்கள். இதற்கு ஐசிசி யும் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் பாலஸ்தனில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் குழந்தைகள் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு உலகம் முழுவதும் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஹமாஸ் படையும் இஸ்ரேல் ராணுவமும் உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவஜா பயிற்சியில் ஈடுபட்ட போது அனைத்து உயிர்களும் சமம்தான் என்ற வாசகத்தை தன்னுடைய ஷூ வில் பாலஸ்தீன கொடி நிற வடிவில் எழுதி பயன்படுத்தினார். இதனைக் கண்ட ஐசிசி நிர்வாகிகள் இந்த ஷூ வை பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் வாசகங்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அனுமதிக்க முடியாது என்றும் கூறி இருக்கிறது.
எனினும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள உஸ்மான் கவாஜா இது அரசியல் நிலைப்பாடு கிடையாது என்றும் மனிதநேய கருத்தை தான் நான் கூறியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீன் என இரண்டு பக்கத்திலும் தான் இல்லை என்றும் மனிதத்தை போற்றுவதற்கே தாம் இவ்வாறு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு யூதரின் உயிர் ஒரு முஸ்லிமின் உயிருக்கு சமம் என்றும் அதேபோல்தான் ஒரு முஸ்லிமின் உயிர் ஒரு இந்துவின் உயிருக்கு சமம் என்றும் குறிப்பிட்டுள்ள உஸ்மான் கவஜா குரலற்ற மக்களுக்காக தான் பேசுவதாக கூறியிருக்கிறார். ஐசிசி யின் இந்த முடிவை எதிர்த்து தான் போராட இருப்பதாகவும் இதை அரசியலாக பார்த்தால் உங்கள் மீதுதான் குற்றம் என்றும் உஸ்மான் கவஜா கூறியிருக்கிறார். இந்த நிலையில் உஸ்மான் கவஜாவின் கருத்துக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ஆதரவளித்துள்ளார். உஸ்மான் கவஜாவுக்கு தாங்கள் துணை நிற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.