ராவல்பிண்டி: பாகிஸ்தானை வீழ்த்திய பின் இந்தியாவுக்கு வர உள்ளதை சூசகமாக கூறி இருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹசன் ஷான்டோ. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரையும் 2 - 0 என முழுமையாக கைப்பற்றி இருக்கிறது வங்கதேசம்.
அடுத்து அந்த அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் பங்கேற்க உள்ளது. அது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹசன் ஷான்டோ சூசகமாக எச்சரிக்கும் வகையில் பேசி இருக்கிறார். இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற பின் வங்கதேச கேப்டன் பேசுகையில் இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்து குறிப்பிட்டார்.

"இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியம். அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நாங்கள் இங்கு வெற்றி பெற வேண்டும் என நினைத்தோம். அனைவரும் தங்கள் வேலையை செய்து முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பந்துவீச்சாளர்களின் பணி ஒழுக்கம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. அதனால் தான் எங்களுக்கு இந்த முடிவு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும் என உண்மையாக உழைத்தார்கள். அது இனியும் தொடரும் என நம்புகிறேன்."
"முதல் டெஸ்ட் போட்டியில் ஷாத்மன் அபாரமாக பேட்டிங் செய்தார். இந்த டெஸ்ட் போட்டியில் ஜாகீர் நன்றாக விளையாடினார். அது எங்களுக்கு நல்ல விஷயமாக அமைந்தது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த தொடர் எங்களுக்கு முக்கியமானது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கிடைத்த இந்த வெற்றி எங்களுக்கு அதிக தன்னம்பிக்கையை அளித்து உள்ளது. எங்கள் அணியில் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் அதிக அனுபவங்களை கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் அவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள்."
"மெஹிதி ஹாசன் மிராஸ் இந்த சூழ்நிலையிலும் 5 விக்கெட் வீழ்த்தியது அற்புதமாக இருந்தது. அவர் அதை இந்தியாவுக்கு எதிராகவும் செய்வார் என நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்காதவர்கள் கூட எங்கள் அணியில் தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள். பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காத நான்கு வீரர்கள் கூட ஃபீல்டிங்கில் நன்றாக செயல்பட்டார்கள். இந்த கலாச்சாரம் தொடரும் என நம்புகிறேன்." என்றார் நஜ்முல் ஹசன் ஷான்டோ.