கொல்கத்தா : வங்கதேச அணி 2023 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக ஆடி வருகிறது.
கடந்த மூன்று உலகக்கோப்பை தொடர்களிலும் வங்கதேசம் அரை இறுதிக்கு முன்னேறாவிட்டாலும் பல போட்டிகளில் பெரிய அணிகளுக்கு சவால் விட்டது.

சில சமயம், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி இருந்தது. அதன் காரணமாகவே வங்கதேச அணிக்கு ரசிகர்கள் பெருகினர். இந்த நிலையில், தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் மோசமாக ஆடி வருகிறது.
இதுவரை ஆப்கானிஸ்தான் அணியை மட்டுமே வென்று இருக்கிறது. கடந்த போட்டியில் பலம் குறைந்த நெதர்லாந்து அணியிடமும் தோல்வி அடைந்து இருந்தது வங்கதேசம். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியை சந்தித்தது. இந்தப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
வங்கதேச அணி கொல்கத்தா ஆடுகளத்தில் ஆடினால் அதிக ரசிகர்கள் அவர்களை காண வருவார்கள். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியை கொல்கத்தா மைதானத்தில் சந்தித்தது வங்கதேசம். நெதர்லாந்து போட்டியில் ஏமாற்றியதற்கும் சேர்த்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்று வங்கதேசம் தங்களை மகிழ்விக்கும் என காத்திருந்தனர் வங்கதேச ரசிகர்கள்.
ஆனால், இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர் கூட தாக்குப்பிடிக்காமல் 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. மக்மதுல்லா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 45, ஷகிப் அல் ஹசன் 43 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி அபாரமாக பந்து வீசி 9 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார். வாசிம் 3, ஹாரிஸ் ரௌப் 2, இப்திகார் அஹ்மத் 1, உசாமா மிர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

வங்கதேச அணியின் மோசமான ஆட்டத்தால் அந்த அணியின் ரசிகர்கள் விரக்தி அடைந்து முதல் இன்னிங்க்ஸின் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினர்.