ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த போதும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்து இருக்கிறார். இந்த போட்டியில் முகமது ரிஸ்வான் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் எடுத்து இருந்தார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்கள் எடுத்து இருந்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 222 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.

முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2023 இல் 203 ரன்கள் எடுத்திருந்தார். அதுவே ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் சேர்த்த அதிக பட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனையை முகமது ரிஸ்வான் முறியடித்து இருக்கிறார். எனினும், இந்த இரண்டு விக்கெட் கீப்பர்களும் அதிக ரன்கள் குவித்த போதும் தங்கள் அணிகளை வெற்றி பெற வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது ரிஸ்வான் இதை தவிர்த்து வேறு சில சாதனைகளையும் செய்து இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றின் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் சேர்த்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். முன்னதாக இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 152 ரன்கள் எடுத்து இருந்தார். முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் சேர்த்ததன் மூலம் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் முகமது ரிஸ்வான்.
மேலும், பாகிஸ்தான் அணிக்காக ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் செய்து இருக்கிறார். 44 ஆண்டுகளுக்கு முன்பு, 1980 இல் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தஸ்லீம் ஆரிஃப் 210 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது 222 ரன்கள் குவித்து அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் ரிஸ்வான்.