ராவல்பிண்டி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதவிருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. ராவல்பிண்டியில் நடக்க இருந்த இந்த போட்டிக்கு முன்னதாக கடும் மழை பெய்தது.
மதியம் இரண்டு மணிக்கு டாஸ் போடப்பட வேண்டிய நிலையில், மழையால் ஆடுகளத்தின் வெளிப்புறம் ஈரப்பதமாக இருந்ததால், அம்பயர் டாஸ் நிகழ்வை தள்ளி வைத்தார். அதைத் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மழை நின்றாலும் ஆடுகளத்தை சீரமைக்க முடியாத நிலை இருந்தது. மைதானம் முழுவதும் மூடும் அளவுக்கு அங்கு வசதி இல்லாததால் ஆடுகளத்தின் மையப் பகுதி மட்டுமே மூடப்பட்டு இருந்தது. அதனால் மழை நின்றாலும் ஆடுகளத்தின் மற்ற பகுதிகள் குளம் போல இருக்கும் என்பதால் அம்பயர்கள் நம்பிக்கை இழந்து 4 மணி அளவில் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.
இதை அடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் ஆறுதல் வெற்றி பெறுவது யார்? என்பதற்கான போட்டியாகவே இது நடக்க இருந்தது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி, நிச்சயமாக இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று, தங்களுக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவை ஓரளவு சமாளிக்க நினைத்தது. ஆனால், மழையால் அதுவும் நடக்காமல் போனது. பாகிஸ்தான் இதற்கு முன் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
முன்னதாக இதே மைதானத்தில் நடைபெற இருந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.