முல்தான்: ஆசியக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நேபாளம் அணி களமிறங்குகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடுகின்றன. அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளதால், ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் போட்டிகளாக நடக்கவுள்ளது. இன்று தொடங்கும் ஆசியக் கோப்பைத் தொடர் செப்.17ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இதில் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகிய 3 அணிகள் ஒரு குரூப்பிலும், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ஒரு குரூப்பிலும் இடம்பெற்றுள்ளன. குரூப் சுற்றின் முடிவில் எந்த ஒரு அணிகள் முதல் இரு இடங்களை பிடிக்கின்றனவோ, அந்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். சூப்பர் 4 சுற்றில் அனைத்து அணிகளும் எதிரணியுடன் ஒவ்வொரு போட்டியில் மோதிக் கொள்ளும். இறுதியாக எந்த அணி டாப் 2ல் முடிக்கின்றதோ, அந்த அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இந்த நடக்கவுள்ள முதல் குரூப் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடக்கவுள்ளன. உலகக்கோப்பைத் தொடருக்கு முன் ஆசியக் கோப்பைத் தொடர் நடக்கவுள்ளதால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆசியக் கோப்பைத் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் இன்று இலங்கை பயணிக்க உள்ளனர். சுமார் ஒரு வார பயிற்சி முகாம் பெங்களூரில் நடைபெற்ற நிலையில், இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆசியக் கோப்பையை கடந்த ஆண்டு தவறவிட்ட இந்தியா, மீண்டும் கைப்பற்றும் என்று பார்க்கப்படுகிறது.