காபூல்: ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் பலியான சம்பவம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலகில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. இந்த "கோழைத்தனமான தாக்குதலுக்கு" கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் கரீம் சாதிக், "பாகிஸ்தான், கிரிக்கெட்டையே அழிக்க நினைக்கிறது," என்று ஆவேசமாகப் பேட்டியளித்துள்ளார்.
மேலும், "இனி இந்தியாவைப் போலவே, நாங்களும் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மாட்டோம்," என்று அவர் கூறியிருப்பது, இரு நாட்டு கிரிக்கெட் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு, பாகிஸ்தான் உடனான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கரீம் சாதிக் அளித்த பேட்டியில் கோபத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தினார். "நாங்கள் பதான்கள். நாங்கள் எந்தத் தாக்குதலுக்கும் பயப்பட மாட்டோம். எங்கள் மூன்று முக்கிய மற்றும் ஐந்து இளம் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்கள் குழந்தைகள் ஏழ்மையான குடும்பங்களிலிருந்து வருகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்களைக் கொன்றதன் மூலம், பாகிஸ்தான் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்துள்ளது" என்று அவர் கூறினார்.
"ஆனால், இதெல்லாம் கிரிக்கெட்டை நிறுத்தாது. நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். ஆனால், இனி இந்தியாவைப் போலவே, நாங்களும் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மாட்டோம்," என்று கரீம் சாதிக் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
உயிரிழந்த வீரர்கள் குறித்துப் பேசிய அவர், "இந்த வீரர்கள், இங்கிருந்து மாகாண கிரிக்கெட்டில் விளையாடியிருக்க முடியும். அவர்கள், உங்கள் டெல்லி ரஞ்சி அணிக்கு நிகரான ஒரு நிலைக்குச் செல்லும் பாதையில் இருந்தனர். கிரிக்கெட் வீரர்கள் உலகை ஒன்றிணைக்க உழைக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தானோ, கிரிக்கெட்டையே அழிக்க நினைக்கிறது. குறைந்தபட்சம் எட்டு அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன" என்று கரீம் சாதிக் வேதனையுடன் குறிப்பிட்டார். இந்த வீரர்கள் தனது நேரடிக் கண்காணிப்பில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
தனது பேட்டியின் இறுதியில், உணர்ச்சிப்பூர்வமான ஒரு கேள்வியை அவர் முன்வைத்தார். "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நான் ஒரு பயங்கரவாதியாக இருக்க முடியுமா? ரஷித் கான் ஒரு பயங்கரவாதியாக இருக்க முடியுமா? நாங்கள் பதான்கள். எங்கள் மதம் அன்பு. நாங்கள் கிரிக்கெட் மூலம் உலகிற்கு அன்பையும், நட்பையும் செய்தியாக அனுப்புகிறோம். இரவில் ஒரு விருந்தினர் மாளிகையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது" என்று அவர் முடித்தார்.
கரீம் சாதிக்கைத் தவிர, ரஷித் கான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, குல்பாடின் நைப் உள்ளிட்ட பல சர்வதேச ஆப்கானிஸ்தான் வீரர்களும் இந்தத் தாக்குதலுக்குத் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அப்பாவி வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், பாகிஸ்தான் மீது ஒரு நீங்கா கறையை ஏற்படுத்தியுள்ளது.