துபாய்: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேச அணி அதிரடியாக நீக்கப்பட்டது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேசத்திற்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு தெரிவித்து வருகிறது. வங்கதேசத்தை தொடர்ந்து பாகிஸ்தானும் உலகக்கோப்பையை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் தங்கள் போட்டிகளை இந்தியாவுக்குப் பதிலாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியபோது, பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோஷின் நக்வி அதற்கு முழு ஆதரவு அளித்தார். வங்கதேசம் உலகக்கோப்பையில் ஒரு முக்கியமான அங்கம் என்றும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்துத் தங்கள் நாட்டு அரசே முடிவு செய்யும் என்றும், தேவைப்பட்டால் தொடரைப் புறக்கணிப்போம் என்றும் அவர் கூறியிருந்தார். மோஷின் நக்வியின் இந்தத் தொடர் பேச்சுகள் ஐசிசி நிர்வாகிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளன.
ஒருவேளை வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் அணியும் உலகக்கோப்பையை புறக்கணித்தால், அந்த அணிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று முக்கிய தடைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உலகக்கோப்பையை புறக்கணித்தால், அடுத்ததாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கத் தடை விதிக்கப்படும். மற்ற சர்வதேச அணிகளுடன் பாகிஸ்தான் விளையாடும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை ரத்து செய்யவும், அதற்குத் தடை விதிக்கவும் ஐசிசி முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்குத் தடையில்லாச் சான்று (NOC) வழங்குவதை நிறுத்தவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது. இது நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் பிஎஸ்எல் தொடர் முடங்கும் அபாயம் உள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மோஷின் நக்வி, ஐசிசியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். "ஒரு குறிப்பிட்ட நாடு (இந்தியா) நினைத்ததைச் சாதிக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்காகப் போட்டி நடைபெறும் இடங்களை மாற்றும் ஐசிசி, வங்கதேசத்திற்கு மட்டும் ஏன் மாற்ற மறுக்கிறது? இது இரட்டை நிலைப்பாடு" என்று விமர்சித்திருந்தார்.
"நாங்கள் ஐசிசிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல, எங்கள் நாட்டு அரசுக்கே கட்டுப்பட்டவர்கள். பிரதமர் நாடு திரும்பியதும் இது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்" என்று நக்வி கூறியது பிரச்சனையை மேலும் பெரிதாக்கியுள்ளது.
வங்கதேசத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பிடிவாதம் பிடித்தால், அந்த அணி சர்வதேச கிரிக்கெட்டில் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஐசிசியின் இந்தத் தீவிர எச்சரிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.